படிவம் 20ல் கையொப்பமிட்டு வெற்றி சான்றிதழ் பெற்ற பிறகே வாக்கு எண்ணிக்கை முகாமிலிருந்து முகவர்கள் வெளியேற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: படிவம் 20-ல் அனைவரும் கையொப்பமிட்டு வெற்றிச் சான்றிதழ் பெறப்பட்ட பிறகுதான் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் வாக்கு எண்ணிக்கை முகாமிலிருந்து வெளியே வர வேண்டும் என்று ஜூன் 4ம் தேதி ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் அறிவுறுத்தியுள்ளார். சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு: வாக்கு எண்ணிக்கை முகாமிற்கு முதலில் செல்லும் முதல் ஆளாகவும், இறுதியாக வெளியேறும் ஆளாகவும் நம்முடைய கழக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் இருக்க வேண்டும். தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிக கவனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். தபால் வாக்குகள் இரண்டு வகைப்படும். ETPBS, சாதாரண தபால் வாக்கு. அதற்குரிய வழிமுறைகள் உங்களுக்கு சொல்லித் தரப்பட்டுள்ளது.

அதைப் பின்பற்றி செல்லாத வாக்குகளை செல்லத்தக்கதாகவும், செல்லத்தக்க வாக்குகளை செல்லாததாகவும் அறிவிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. எப்படி இவிஎம் வாக்குகள் முக்கியமோ, தபால் வாக்குகளும் மிக முக்கியமானவை. எனவே, அந்த எண்ணிக்கைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.வாக்கு எண்ணிக்கை முதலில் தபால் வாக்குகளில் மட்டும்தான் துவங்க வேண்டும், முதல் அரை மணி நேரம் கழித்துத்தான் இவிஎம் வாக்கு இயந்திரங்கள் எண்ணப்பட வேண்டும். தபால் வாக்குகள் எண்ணிக்கையை என்ன காரணம் கொண்டும் தாமதப்படுத்தாமல் துரிதமாக எண்ணி அதனுடைய முடிவுகளைத் தருவதை உறுதிசெய்ய வேண்டும்.

இவிஎம் இயந்திரங்களை எண்ணுவதற்கு முன்பாக அந்த இவிஎம் இயந்திரங்களில் இருக்கும் சீல்கள் சரியாக இருக்கிறதா என்பதை வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். இயந்திரங்களின் சீல்கள் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்த பிறகு, இயந்திரத்தின் எண்கள் சரியாக இருக்கிறதா என்பதை படிவம் 17சி-ல் இருப்பதை ஒப்பிட்டுப் பார்த்து அதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 17சி படிவத்தில் உள்ள பதிவான வாக்குகள் இவிஎம் இயந்திரத்திலும் ஒத்துப்போகிறதா என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பிறகு, வாக்குப் பதிவு துவங்கிய நேரம் மற்றும் முடிவுற்ற நேரத்தை இவிஎம் இயந்திரத்தில் பார்த்து, சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

இவற்றில் ஏதாவது ஒன்றில் சீல்கள் கிழிக்கப்பட்டிருந்தாலோ அல்லது இயந்திர எண் ஒத்துப்போகவில்லை என்றாலோ, பதிவான வாக்குகள் ஒத்துப்போகவில்லை என்றாலோ, வாக்குப் பதிவு நேரத்தில் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தாலோ, வாக்கு எண்ணிக்கைக்கு அந்த இயந்திரத்தை அனுமதிக்காமல் தனியாக எடுத்து வைக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை முகவர்கள் குறிப்பாக RO Table-க்கு செல்லும் வாக்கு எண்ணிக்கை முகவர் இதுகுறித்த கையேடுகளையும், சட்டங்களையும் அறிந்தவராக இருத்தல் நலம்.

வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஐந்து விவிபேட் இயந்திரங்களை எடுத்து அதில் உள்ள காகித வாக்குகளை எண்ணி, இவிஎம் இயந்திரத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கையோடு ஒத்துப் போகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். படிவம் 17சி-ல் நிரப்பப்படும் வாக்குகள் சரியாக படிவம் 20-ல் எழுதப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். படிவம் 20-ல் எழுதப்பட்ட வாக்குகள் மொத்த வாக்குகளாக எண்ணப்படும்போது அல்லது கூட்டப்படும்போது அந்த எண்ணிக்கையில் ஏதும் தவறில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகு, படிவம் 20-ல் அனைவரும் கையொப்பமிட்டு வெற்றிச் சான்றிதழ் பெறப்பட்ட பிறகு வாக்கு எண்ணிக்கை முகவர்கள் வாக்கு எண்ணிக்கை முகாமிலிருந்து வெளியே வர வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

* வாக்கு எண்ணிக்கை முகாமிற்கு முதலில் செல்லும் முதல் ஆளாகவும், இறுதியாக வெளியேறும் ஆளாகவும் திமுக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் இருக்க வேண்டும்.
* இவிஎம் இயந்திரங்களை எண்ணுவதற்கு முன்பாக அதில் இருக்கும் சீல்கள் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

The post படிவம் 20ல் கையொப்பமிட்டு வெற்றி சான்றிதழ் பெற்ற பிறகே வாக்கு எண்ணிக்கை முகாமிலிருந்து முகவர்கள் வெளியேற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: