(இதையடுத்து அவைக் காவலர்கள் அதிமுக உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றினர்). தொடர்ந்து சபாநாயகர் பேசும்போது, பேரவை விதி 56ன் கீழ் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரும்போது, அதை விவாதத்துக்கு எடுப்பதா, வேண்டாமா என்பது குறித்து அவைத் தலைவர்தான் முடிவு எடுக்க வேண்டும். நீங்கள் ஒத்தி வைப்பு தீர்மானம் கொடுத்துவிட்டு, என் பதிலை கேட்காமல் கூச்சல் போடுகிறீர்கள். ஒத்தி வைப்பு தீர்மானத்தின் மீது பேச எதிர்க்கட்சித் உறுப்பினர்கள் தயாராக இல்லை. பேரவை விதி 65(4) பொதுத் தீர்மானமோ, ஒத்திவைப்பு தீர்மானமோ கொண்டு வந்து அவர்கள் பேசியதும், அதற்கு முதல்வரோ, அமைச்சரோ பதில் சொல்லிவிட்டால் அதை விவாதத்துக்கு எடுக்க முடியாது. எங்களை பேச அழைக்கவில்லை என்று வெளியே சென்று பேட்டி தர வேண்டும் என்பதுதான் அவர்களது விருப்பம். தொடர்ந்து அவர்கள் இப்படி நடந்து கொண்டதால் வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
சபாநாயகர்: பேரவை நடவடிக்கைகளில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தியும் பேரவை அலுவல்கள் நடக்க விடாமல் இடைமறித்தும், பேரவை சட்ட விதிகளை மீறியும், அதிமுக உறுப்பினர்கள் செயல்பட்டுள்ளதால், பேரவை 121(2)ன் கீழ் அவர்களை இந்த கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்து உத்தரவிடுகிறேன். கூட்டத் தொடர் முடியும் வரையில் எஞ்சிய நாட்களுக்கு அவர்கள் பேரவைப் பணிகளில் கலந்து கொள்ளக் கூடாது.
இதைத் தொடர்ந்து முதல்வர் பேசியதாவது: கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் குறிப்பாக அதிமுக உறுப்பினர்கள் எழுப்ப விரும்பும் கேள்விகள் தொடர்பாக பதிலளிக்க இந்த அரசு தயாராக இருக்கிறது என்று சட்டமன்றம் தொடங்கிய நாளில் இருந்தே தெளிவாக இந்த அவையில் தெரிவித்து வருகிறேன். தாங்களும் அதைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனாலும் மக்கள் பிரச்னையைப் பற்றி இந்த பேரவையில் பேச வாய்ப்பளிப்பதாக தெரிவித்தும், அதை ஏற்க மனமில்லாமல் எதிர்கட்சித் தலைவர் வெளியில் சென்று பேசுவது என்பது பேரவையின் மாண்புக்கும் மரபுக்கும் ஏற்புடைய செயல் அல்ல. பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டிய அதிமுக, மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயக் கடமையை ஆற்றாமல் வீண் விளம்பரத்தை தேடுவதிலேயே முனைப்பாக உள்ளது. ஆனால் நாம் இந்த துயரச் சம்பவம் குறித்து உண்மையான அக்கறையுடன் உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டு இருக்கிறது. இதுதான் நமக்கும், அவர்களுக்கும் உள்ள வேறுபாடு. இவ்வாறு முதல்வர் பேசினார்.
The post கூட்டம் தொடங்கிய நாளில் இருந்தே ரகளை அதிமுக எம்எல்ஏக்கள் தொடர் முழுவதும் சஸ்பெண்ட்: பேரவை தலைவர் அப்பாவு உத்தரவு appeared first on Dinakaran.