கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கை; இன்று வெளியானது தரவரிசை பட்டியல்: நாளை தொடங்குகிறது சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு

சென்னை: கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை தொடங்க உள்ளது. தமிழக உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான, 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு, கடந்த 6ம் தேதி தொடங்கியது.

பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஆர்வத்துடன் விண்ணப்பித்தார்கள். வழக்கம்போல், நடப்பாண்டும் பி.காம்., பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்பட பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் ஆர்வம் காண்பித்தார்கள். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க மே 20ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், மாணவ, மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினர் அரசு கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் 4 நாட்கள் நீட்டித்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டது

இந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த 24ம் தேதியுடன் நிறைவு பெற்றது. விண்ணப்ப பதிவில், 2 லட்சத்து 58 ஆயிரத்து 527 விண்ணப்பங்கள் குவிந்தன. இதில், 2 லட்சத்து 11 ஆயிரத்து 10 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர். இதற்கிடையே கட்டணம் செலுத்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். அந்தவகையில் நடப்பாண்டு கலந்தாய்வில் 2.11 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதையடுத்து விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் அந்தந்த அரசுக் கல்லூரிகளுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கல்லூரிகள் தரவரிசைப் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு சேர்க்கை தேதி தொடர்பான விவரங்களை செல்போனுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கை கலந்தாய்வுகள் தொடங்குகின்றன. முதல்கட்டமாக, மாற்றுத்திறனாளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கான சிறப்பு ஒதுக்கீடு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்பிறகு, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு அடுத்த மாதம் (ஜூன்) 10ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு அடுத்த மாதம் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும் நடத்தப்பட உள்ளது.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற ஜூலை மாதம் 3ம் தேதி தொடங்குகின்றன. கடந்த 2023-24ம் கல்வியாண்டு, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு 2 லட்சத்து 99 ஆயிரத்து 558 விண்ணப்பங்கள் குவிந்தன. அதில், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 252 மாணவர்கள், ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 274 மாணவிகள், 78 திருநங்கைகள் என 2 லட்சத்து 43 ஆயிரத்து 604 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதல் விவரங்களை மாணவர்கள் /www.tngasa.in/ எனும் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 04424343106 / 24342911 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று உயர்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கை; இன்று வெளியானது தரவரிசை பட்டியல்: நாளை தொடங்குகிறது சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு appeared first on Dinakaran.

Related Stories: