குன்னூர், மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் முகாம்

 

ஊட்டி, மே 20: குன்னூர், மேட்டுபாளையம் சாலையில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு வனத்துறை அறிவுறுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர், மேட்டுபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கல்லாறு பகுதி முக்கிய யானைகள் வழித்தடமாக உள்ளது. இந்த வழித்தடத்தில் பர்லியார், மரப்பாலம் உள்ளிட்ட இடங்களில் பலாப்பழ சீசன் துவங்கியுள்ளதால் இப்பகுதிகளில் யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளன.

பிறந்து ஒரு வாரமே ஆன யானை குட்டி உட்பட 4 காட்டு யானைகள் கேஎன்ஆர் பகுதியில் முகாமிட்டுள்ளன. சாலைகளில் உலா வரும் இந்த யானை கூட்டம் அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் நீர் அருந்திய படி நடமாடி வருகின்றன. அவ்வப்போது குட்டியுடன் சாலையை கடப்பதால் போக்குவரத்தும் சிறிது நேரம் பாதிப்படைகின்றன.

குன்னூர், மேட்டுபாளையம் சாலையில் குட்டியுடன் காட்டு யானைகள் உலா வருவதால் இவ்வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் குறிப்பாக இருசக்கர வாகன ஒட்டிகள் பாதுகாப்பாகவும் மிகுந்த கவனத்துடன் பயணிக்குமாறு வனத்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர். யானையை புகைப்படம் எடுக்கிறேன் என்ற பெயரில் அதன் அருகாமையில் நெருங்கி சென்று தொந்தரவு செய்வதையும் தவிர்க்குமாறு கேட்டு கொண்டுள்ளனர். இதனிடையே யானைகள் நடமாட்டத்தை தொடர்ந்து வனத்துைறயினர் கண்காணித்து வருகின்றனர்.

The post குன்னூர், மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: