போதைப்பொருள் தடுப்பு தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு

மதுரை : போதைப்பொருள் தடுப்பு தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “மதுரை மாவட்டம் ஒத்தக்கடை,அருகே நீலமேக நகர், ஐயப்பன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். மது மற்றும் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபடுபவர்கள், மற்றும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மேலும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள், கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிய சிறப்புப் பிரிவை உருவாக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும், ‘என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழகத்தில் மட்டும்தான் மாவட்ட வாரியாக உதவி ஆணையர் அல்லது துணை காவல்துறை கணிக்கணிப்பாளர் தலைமையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுகள் உருவாக்கப்பட்டு, சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். குஜராத், உத்தரப் பிரதேசம், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்படும் அதிகளவிலான போதைப் பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்படுவதாகவும் அவர் வாதிட்டார். இது தொடர்பாக தமிழ்நாடு போதைப்பொருள் தடுப்பு பிரிவு எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையையும் அரசு வழக்கறிஞர் சமர்ப்பித்தார். இந்த அறிக்கையை பார்த்த நீதிபதிகள், தமிழக அரசு நடவடிக்கைகளுக்கு பாராட்டுகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டிற்குள் போதைப்பொருட்கள் நுழைவதைத் தடுக்க காவல்துறையினருக்கு போதிய பயிற்சிகள் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கில் விரிவான உத்தரவை பிறப்பிப்பதற்காக விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

The post போதைப்பொருள் தடுப்பு தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: