காங். வேட்பாளர் வாபஸ்; இந்தூர் மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு 7.5சதவீதம் குறைவு

இந்தூர்: மத்தியப்பிரதேசத்தில் இந்தூர் மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு விகிதம் 7.5 சதவீதம் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூர் மக்களவை தொகுதி மற்றும் இதர 7 தொகுதிகளுக்கு நான்காவது மற்றும் இறுதி கட்டமாக நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அக்‌ஷய் காந்தி பாம் கடைசி நேரத்தில் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்று பாஜவில் இணைந்தார்.

இதனால் இந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடமுடியவில்லை. இந்தூர் தொகுதியில் 72 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி தேர்தலில் இருந்து வெளியேறியுள்ளது. 35 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியை பாஜ தோற்கடித்து வருகின்றது. இங்கு பாஜ வேட்பாளர் தவிர 13 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வேட்பாளர் பாஜவில் இணைந்ததால் காங்கிரஸ் கட்சி அதிருப்தி அடைந்தது. எனவே பொதுமக்கள் நோட்டாவுக்கு வாக்களிக்கும்படி காங்கிரஸ் பிரசாரங்களில் வலியுறுத்தி வந்தது.

வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில், அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்தூர் தொகுதியில் 25.27லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 61.75 சதவீதம் பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலுடன் ஒப்பிடுகையில் வாக்குப்பதிவு சதவீதம் 7. 5 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு 69.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. மேலும் நோட்டாவுக்கு 5045 வாக்குகள் பதிவாகி இருந்தது.

The post காங். வேட்பாளர் வாபஸ்; இந்தூர் மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு 7.5சதவீதம் குறைவு appeared first on Dinakaran.

Related Stories: