மே.வங்கத்தில் 30, ஒடிசா, ஆந்திராவில் தலா 17 பாஜ 400 இடங்களுக்கு மேல் நிச்சயம் வெற்றி பெறும்: அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் பாஜ 400 இடங்களுக்கு மேலும், ஒடிசா, ஆந்திராவில் பாஜ கூட்டணி 17 இடங்களில் வெற்றி பெறும் என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் நேற்று அளித்த பேட்டி: எதிர்க்கட்சிகள் தேர்தலில் தோல்வியடையும் போதெல்லாம் அவர்கள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பற்றி கேள்வி கேட்கிறார்கள். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடக்க சாத்தியமே இல்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் மோசடி செய்யக் கூடிய தேர்தலை விரும்புகிறார்கள். 7 கட்ட தேர்தல் முடிந்து ஜூன் 4ம் தேதி முடிவுகள் வௌியாகும்போது பாஜ கூட்டணி 400 இடங்களை தாண்டி வெற்றி பெறும். மேற்குவங்கத்தில் 24 முதல் 30 இடங்கள் வரை பாஜ வெற்றி பெறும். ஒடிசா, ஆந்திரா, அருணாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஒடிசா, ஆந்திராவில் பாஜ கூட்டணி தலா 17 இடங்களில் வெற்றி வாகை சூடும். ஒடிசா, ஆந்திரா, அருணாச்சலபிரதேச பேரவை தேர்தல்களில் பாஜ நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

பாஜ 399 இடங்களை பெற்றாலும் 400ஐ தாண்டவில்லை என்று நீங்கள்(எதிர்க்கட்சிகள்) சொன்னால் அது உங்களுடைய புத்திசாலித்தனம். பாஜவுக்கு இது நேர்மறையான வாக்குகளாக இருக்கும். நாங்கள்(பாஜ) ஆட்சியில் உள்ள மாநிலங்களில் மக்களின் ஆதரவை பெறுவோம். ஆட்சியில்லாத மாநிலங்களில் மக்களின் ஆணையை பெறுவோம். இது ஒன்றிய பாஜ அரசின் பணிகளுக்கு சாதகமான ஆணை ” என்று இவ்வாறு தெரிவித்தார்.
பாஜவின் மத அடிப்படையிலான பிரசாரங்கள் குறித்த கேள்விக்கு அமித் ஷா, “நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை கொண்டு வருவது, சிறப்பு பிரிவு 370 ரத்து பற்றி பேசுவது, முஸ்லிம்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக பேசுவது ஆகியவை மத அடிப்படையிலான பிரசாரங்கள் என்றால் நாங்கள்(பாஜ) நிச்சயம் அந்த பிரசாரங்களை செய்யும்’’ என்றார்.

 

The post மே.வங்கத்தில் 30, ஒடிசா, ஆந்திராவில் தலா 17 பாஜ 400 இடங்களுக்கு மேல் நிச்சயம் வெற்றி பெறும்: அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை appeared first on Dinakaran.

Related Stories: