ேவன் மீது ரயில் மோதி 9 விஏஓக்கள் பலியான வழக்கில் ₹1.44 கோடி இழப்பீடு வேலூர் கோர்ட் தீர்ப்பு அரக்கோணம் அருகே

வேலூர், மே.4: அரக்கோணம் அருகே வேன் மீது ரயில் மோதி 9 விஏஓக்கள் பலியான வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹1.44 கோடி இழப்பீடு வழங்க வேலூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 தேதி கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநாடு நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அப்போதைய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட விஏஓக்கள் ஒரு மினிவேனில் புறப்பட்டுச் சென்றனர். மாநாட்டுக்குச் செல்வதற்கு முன்பாக அரக்கோணம் அருகே கோவிந்தவாடி அகரம் பகுதியிலுள்ள குருகோவிலுக்குச் செல்ல முடிவு செய்தனர்.

அதன்படி அவர்கள் சென்றபோது கோவிந்தவாடியில் இருந்து அந்த கோவிலுக்குச் செல்லும் வழியில் ஒரு ஆளில்லாத ரயில்வே பாதையை காலை 9.40 மணியளவில் கடக்க முயன்றனர். அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் அந்த மினிவேன் மீது மோதியது. இந்த விபத்தில் விஏஓக்கள் செல்வபாண்டியன், தாண்டவராயன், துரைசாமி, தாமோதரன், நந்தகுமார், வெங்கடேசன், சண்முகபரணி, மோகன், குமாரசாமி ஆகியோரும், மதிவாணன் என்ற விஏஓவின் மகன் பிரவீன்குமார் (17), மினிவேன் டிரைவர் என 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்ட விஏஓக்கள் பலத்த காயமடைந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த விஏஓக்கள் உட்பட 12 பேரின் குடும்பத்தினர் இழப்பீடு கோரி வேலூர் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் 2008ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சாந்தி, பாதிக்கப்பட்ட விஏஓக்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக ₹1 கோடியே 44 லட்சத்து 97 ஆயிரத்து 551 வழங்க வேண்டும். மேலும் அதற்கான வட்டி, வழக்குக்கான மொத்த செலவு ஆகியவையும் வழங்கப்பட வேண்டும். இந்த இழப்பீடு தொகையை விபத்துக்குள்ளான மினிவேனின் காப்பீட்டு நிறுவனமும், தென்னக ரயில்வேயும் சமமாக பிரித்து அளிக்க வேண்டும் என்று தீர்ப்புக்கூறினார்.

The post ேவன் மீது ரயில் மோதி 9 விஏஓக்கள் பலியான வழக்கில் ₹1.44 கோடி இழப்பீடு வேலூர் கோர்ட் தீர்ப்பு அரக்கோணம் அருகே appeared first on Dinakaran.

Related Stories: