பணப் பட்டுவாடா விவகாரம்; தேமுதிக நிர்வாகியை சரமாரி தாக்கிய அதிமுக கவுன்சிலர்

கரூர்: தேர்தலில் பணப்பட்டுவாடா குறித்து பேசியபோது ஏற்பட்ட தகராறில் தேமுதிக நிர்வாகியை அடித்து உதைத்த அதிமுக மாவட்ட கவுன்சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் முன்னாள் கவுன்சிலர் ஆல்வின்(47). இவர் நேற்று காலை பாலவிடுதி காவல் நிலையம் அருகே தனது கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அந்தவழியாக வந்த கூட்டணி கட்சியான அதிமுகவை சேர்ந்த மணிகண்டன், ஆல்வினிடம் தேர்தல் பணி தொடர்பாக பேச்சுக்கொடுத்துள்ளார்.

இதில் அவர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டபோது அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் அங்கு வந்தார். அப்போது அவருடனும், தேர்தல் பணி, பணம் பட்டுவாடா தொடர்பாக ஆல்வின் கருத்துமோதலில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், ஆல்வினை சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ஆல்வின் கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக ஆல்வின் அளித்த புகாரின்பேரில் பாலவிடுதி போலீசார் ரமேஷ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post பணப் பட்டுவாடா விவகாரம்; தேமுதிக நிர்வாகியை சரமாரி தாக்கிய அதிமுக கவுன்சிலர் appeared first on Dinakaran.

Related Stories: