ஒரு நாள் கலெக்டர் ஆகணுமா? இதை பண்ணுங்க… மாணவர்களுக்கு லக்கி சான்ஸ்

திருச்சி: ஒரு நாள் கலெக்டர் ஆக மாணவர்களுக்கு ஒரு லக்கி சான்ஸ் கிடைத்து உள்ளது. திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மற்றும் பள்ளிக்கல்வி துறை இணைந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள 434 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளை கொண்டு உருவாக்கப்பட்ட போதைப் பொருள் எதிர்ப்புக்குழுவை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் பள்ளி மாணவர்கள் வரைந்த விழிப்புணர்வு ஓவியங்களை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மோனொ ஆக்டிங் நாடகம், பாடல் இடம் பெற்றது. மாணவர்களுக்கு போதைப்பொருள் எதிர்ப்புக்குழு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதில் சிறப்புரையாற்றிய மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பேசுகையில், ‘தங்களுடைய பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் போதை வஸ்துகள் விற்பனை செய்வது குறித்தும், சக மாணவனை போதை பழக்கத்தில் இருந்து காப்பாற்றவும் தகவல் தரும் மாணவர்களின் அடையாளங்கள் வெளியே தெரியாமல் பாதுகாக்கப்படும்.

எனவே தங்களுடைய பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு குழுவை வழிநடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், போதை பொருள் விற்பனையை தடுக்கவும், தொடர்ந்து முயற்சி எடுக்கும் மாணவ, மாணவிகளுக்கு கட்டாயம் ஒரு பரிசு வழங்கப்படும். அது மாவட்ட கலெக்டரின் இருக்கை ஒருநாள் முழுவதும் அவர்களுக்கு வழங்கப்படும். அந்த ஒருநாளில் மாவட்ட கலெக்டராகிய நானும், ஒருநாள் கலெக்டராக அமரும் அந்த மாணவருக்கு கட்டுப்படுவேன். அவருடைய சொல்லுக்கு கட்டுப்படுவேன் என்று கூறினார்.

The post ஒரு நாள் கலெக்டர் ஆகணுமா? இதை பண்ணுங்க… மாணவர்களுக்கு லக்கி சான்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: