கண்ணகி கோயிலில் கேரள அதிகாரிகள் தனியாக ஆய்வு: மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க கோரிக்கை

 

கூடலூர், ஏப்.10: கூடலூர் அருகே தமிழக-கேரள எல்லையில், மங்கலதேவி மலையில் கண்ணகி கோயிலில் தேவிகுளம் சப்கலெக்டர், தமிழக அதிகாரிகள் இல்லாமல் தன்னிச்சையாக சென்று ஆய்வு நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில் தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் தேனி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மங்கலதேவி கண்ணகி கோயில் என்பது 1983ம் ஆண்டு மத்திய அரசின் உத்தரவின்படி கோயில் பராமரிப்பு கேரளா வசம் இருந்தாலும், கோயில் இட உரிமை தமிழ்நாடு வசம் உள்ளது. இரண்டு மாநில அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும். இந்நிலையில், கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம் சப்கலெக்டர், நேற்று முன்தினம் தன்னிச்சையாக ஆய்வு செய்துள்ளார். எந்த ஒரு நிகழ்விலும் மங்கலதேவி கண்ணகி கோயிலை ஆய்வு செய்யும்போது இரு மாவட்ட அலுவலர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாகும்.

ஆனால், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கோயில் வளாகத்தை தேவிகுளம் சப்கலெக்டர் தன்னிச்சையாக ஆய்வு செய்ததை மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையின் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம். இப்பிரச்சனையில் தேனி மாவட்ட நிர்வாகம், இடுக்கி மாவட்ட நிர்வாகத்தின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனவும், கண்ணகி கோயிலில் கேரள அதிகாரிகள் சென்று வருவதை தேனி மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கண்ணகி கோயிலில் கேரள அதிகாரிகள் தனியாக ஆய்வு: மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: