ஆயிரம் ரூபாய் திட்டத்தால் தாய்மார்களின் சின்னச்சின்ன கனவுகள் எல்லாம் நிறைவேறுகிறது: மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம்

மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட துறைமுகம் பகுதியிலும், அண்ணாநகர் பகுதியிலும் தேர்தல் பிரச்சாரம் செய்தார். இப்பிரச்சாரக் கூட்டத்தில் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு, அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே. மோகன், துறைமுகம் பகுதி செயலாளர்கள் ராஜசேகர், முரளி, அண்ணாநகர் பகுதி செயலாளர்கள் ராமலிங்கம், பரமசிவம், எழும்பூர் பகுதி செயலாளர்கள் வேலு, சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கமல்ஹாசன் பேசியதாவது: தயாநிதி மாறன் வெற்றி பெறுவார் என்று தைரியமாக கட்டியம் கூறலாம்.

அத்தனை முறை வெற்றி பெற்றுள்ளார். அதற்கெல்லாம் காரணம் நீங்கள்தான். இம்முறையும் அவர் வெற்றிக்கு காரணமாக நீங்கள் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆயிரம் ரூபாய் எல்லோருக்கும் உண்டு என்று ஸ்டாலின் கொடுத்ததனால் எத்தனை தாய்மார்களின் சின்னச் சின்ன கனவுகளெல்லாம் நிறைவேறுகிறது. மதிய உணவுத் திட்டத்தை காலை உணவாகவும் மாற்றி, ‘தம்பி நல்லா சாப்பிடு.. நல்லா படி’ என்று சொல்வதற்கு ஒரு முதல்வர் இருக்கிறார். இந்தியாவின் முதல்வர்களில் எல்லாம் அவர் முதல்வராக இருக்கிறார் என்பதில் மிகையில்லை. இது திராவிட மாடல் என்று சொல்லி கொண்டு நான் செய்ய மாட்டேன் என்று குஜராத்தில் உட்கார்ந்து கொண்டே இருக்க வேண்டியது தான். நீங்களும் செய்தால் நாங்கள் பாராட்டுவோம். குஜராத் மாடல் நல்லா நடந்து கொண்டிருக்கிறது என்றால் ஏன் வட இந்தியாவிலிருந்து, பீகாரிலிருந்து, குஜராத்திலிருந்து, உ.பி.யிலிருந்து வந்து வேலை பார்க்கிறார்கள்? இங்கு ப்ரீ பஸ் பாஸ் கொடுக்கிறார்கள்.இந்தத் திட்டம் இந்தியா முழுவதும் வந்தால் உலகமே திரும்பிப் பார்க்கும் இந்தியாவை. இப்ப தமிழகத்தைத் திரும்பிப் பார்த்தே ஆக வேண்டும். இந்தத் திட்டத்தை இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் செய்து காட்டினால் எப்படி இருக்கும்? இது ஒன்றிய அரசுக்குத் தெரிய மாட்டேங்குது.

அதற்கு காரணம் அந்த அரசு யாரோடும் ஒன்றாத அரசு. இந்தியாவில் ஊழல் இல்லாமல் இருந்ததில்லை. ஆனால் இந்த அளவுக்கு உலகத் தரத்தில் ஊழல் நடந்தது கிடையாது. தேர்தல் பத்திர ஊழல் அந்த அளவுக்கு இருக்கிறது. இவர்களுக்கு வந்த டொனேஷன், இ.டியை அனுப்பி மிரட்டி வாங்கினது, இல்லை அனுப்புவோம் என்று சொல்லி வாங்கியது, அப்படியும் மசியவில்லை என்றால் உள்ளே தள்ளுவேன் என்று மிரட்டி வாங்கியது. தயவுசெய்து இந்த தருணம் இந்தியாவின் சரித்திரத்தை மாற்றி அமைக்கும் தருணம். அதில் உங்கள் பங்கு இருக்க வேண்டும். அதை மறந்து விடாதீர்கள். அதை ஞாபகம் வைத்துக் கொண்டு மத்திய சென்னை இந்தியா கூட்டணி வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு ஓட்டுப் போடுங்கள். நாளை நமதே. இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

The post ஆயிரம் ரூபாய் திட்டத்தால் தாய்மார்களின் சின்னச்சின்ன கனவுகள் எல்லாம் நிறைவேறுகிறது: மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: