மதுரை கிழக்குத்தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம்: அமைச்சர் பி.மூர்த்தி அறிக்கை

 

மதுரை, மார்ச் 24: மதுரை கிழக்குத்தொகுதியில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும் என, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது அறிக்கை; திமுக இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணத்தை துவக்கி பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து இன்று (மார்ச் 24) மாலை 6 மணிக்கு மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட ஊமச்சிகுளத்தில் பிரசார பரப்புரையில் ஈடுபடுகிறார். இந்த பிரச்சாரத்தின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எழுச்சி உரையாற்ற உள்ள திடலில் கழகத்தலைவர் முதலமைச்சரின் நல்லாட்சித்திட்டங்கள் பலவற்றை மக்கள் பார்க்கும் வகையில் பதாகைகள் வைக்கப்பட உள்ளது.

மேலும் பல்லாயிரக்கணக்கானோர் பிரசாரத்தில் பங்கேற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை மதுரை வடக்கு மாவட்ட செயலாளர், அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் திமுகவினர் செய்து வருகின்றனர். இக்கூட்டத்தில் மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுரை கிழக்கு, மேலூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள், கழகத்தினர், கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post மதுரை கிழக்குத்தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம்: அமைச்சர் பி.மூர்த்தி அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: