அமலாக்கத்துறை வழக்கிலிருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரிய மனு மீது 28ல் தீர்ப்பு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தகவல்

சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் அவரது வழக்கறிஞர் என்.பரணிகுமார் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், செந்தில் பாலாஜியிடம் 67 கோடியே 40 லட்சம் ரூபாய் இருந்ததாக கூறுகிறார்கள். ஆனால் அது நிரூபிக்கப்படவில்லை. அமலாக்கத்துறை வழக்கில் செந்தில் பாலாஜி தண்டிக்கப்படும் நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டால் வழக்கு என்ன ஆகும்?. செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று வாதிட்டார்.

அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது வங்கி கணக்கில் அதிகளவில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்டவைகளில் இருந்து 30 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறுவடைந்ததையடுத்து, செந்தில் பாலாஜி மனு மீதான தீர்ப்பை மார்ச் 28ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

* காவல் நீட்டிப்பு
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைவடைந்தது. இதையடுத்து, புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 28ம் தேதிவரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

The post அமலாக்கத்துறை வழக்கிலிருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரிய மனு மீது 28ல் தீர்ப்பு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: