டாக்டர் சூரியின் அறிவுறுத்தலின்படி உடனடியாக ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவரது மூளயைில் ரத்தப் போக்கு ஏற்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டது. இதனால் உடனடியாக ஜக்கி வாசுதேவ் மருத்துவமனை சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டார். ஆனால் 15, 16ம் தேதிகளில் முக்கியமான கூட்டங்கள் இருப்பதால் வலி நிவாரணியுடன் அந்த கூட்டங்களில் அவர் பங்கேற்று முடித்தார். அதைத் தொடர்ந்து கடந்த 17ம் தேதி அவருக்கு லேசாக சுயநினைவு குறைந்து, இடதுகால் பலவீனம் அடைந்தது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர் சூரியின் தலைமையில் பரிசோதனை செய்யப்பட்டது.
சிடி ஸ்கேன் எடுத்து பார்த்ததில் மூளை வீக்கம் அதிகரித்திருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, ரத்தக்கசிவை அகற்ற உடனடியாக டாக்டர்கள் குழுவால் மண்டை ஓட்டை அறுத்து மூளை அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பின் வென்டிலேட்டர் அகற்றப்பட்டு, ஜக்கி வாசுதேவ் உடல் நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் குணமடைந்து வருகிறார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஜக்கி வாசு தேவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனை படுக்கையில் இருந்தபடி வெளியிட்டுள்ள வீடியோவில், ‘‘அப்போலோ மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் என் மண்டை ஓட்டை அறுத்து எதையோ கண்டுபிடிக்க முயன்றார்கள். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. முற்றிலும் காலியாக இருந்தது. அதனால் அவர்கள் அதில் ஒட்டு போட்டுள்ளனர். இங்கு நான் தையல் போட்ட மண்டை ஓட்டுடன், எந்த பாதிப்பும் அடையாத மூளையுடன் இருக்கிறேன்’’ என கூறி உள்ளார்.
The post ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் ரத்தக்கசிவு டெல்லியில் உடனடி அறுவைசிகிச்சை: மருத்துவமனை அறிக்கை appeared first on Dinakaran.