நாளை பிளஸ் 2 தேர்வு தொடங்குகிறது: மாணவர்களே பதற்றமடையாதீங்க… மனசும், உடலும் சீராக இருக்கட்டும்; மனநல மருத்துவர்கள் அட்வைஸ்

தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு (பிளஸ் 2) மாணவர்களுக்கு நடப்பாண்டு அரசுப்பொது தேர்வுக்கான அட்டவணை கடந்த நவம்பர் மாதமே வெளியிடப்பட்டுவிட்டது. 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி (நாளை) தொடங்கி மார்ச் 22ம் தேதி முடிகிறது. தேர்வு முடிவுகள் மே 6ம் தேதி வெளியிடப்படும் எனவும், அதேபோல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற்று தேர்வு முடிவுகள் மே 10ம் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதி வரை நடைபெற்று தேர்வு முடிவுகள் மே 14ம் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 11 மற்றும் 12ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் ஏற்கனவே முடிந்து விட்டது. 10ம் வகுப்பிற்கான செய்முறைதேர்வு மட்டும் இன்று முடிகிறது. இதனைத் தொடர்ந்து 12ம் வகுப்புக்கான எழுத்துத்தேர்வு நாளை (மார்ச் 1) தொடங்குகிறது. இது உயர் கல்விக்கான தொடக்கம் என்பதால், தங்களின் அடுத்தக்கட்ட பயணத்திற்காக மாணவ-மாணவிகள் தயாராக உள்ளனர். இந்த தேர்வுக்கு பிறகு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், மருத்துவர், இன்ஜினியர், வழக்கறிஞர் என தங்களுக்கான கனவுகளை நோக்கி நகரத்தொடங்குவர். இந்த கனவுக்களுக்கான முதல் படிதான் இந்த பொதுத் தேர்வும், இதில் கிடைக்கும் மதிப்பெண்ணும்தான். என்றாலும் இதுமட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தேர்வை மாணவர்கள் எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் பணிபுரியும் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவரான பூர்ண சந்திரிகா கூறியதாவது: எக்ஸாம்…எக்ஸாம் என்று மனதை பதற்றத்துடன் வைத்துக்கொள்ளாமல், உடல்நிலையில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். உடல் மற்றும் மனமும் சீராக இருந்தால் தான் தேர்வை நிதானமாக எழுத முடியும். நல்ல சத்தான உணவுகளை சாப்பிட்டு சரியான நேரத்தில் தூங்குங்கள். ஒரு வருடம் கஷ்டப்பட்டு படித்ததை ஒரே நாளில் தொலைத்து விடாதீர்கள். தூக்கம், சாப்பாடு என அனைத்தையும் மறந்து படித்துக்கொண்டே இருந்தால் தேர்வு அறையில் எழுத முடியாமல் மயக்கம் தான் வரும். கடைசி நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தை கைவிட்டு, தினமும் கொஞ்சம் கொஞ்சம் என அனைத்தையும் தேர்வுக்கு ஒரு நாள் முன்பாகவே ரிவைஸ் செய்து விடுங்கள்.

மாணவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு ஒவ்வொரு தேர்வு முடிந்ததும் அந்த வினாத்தாளை வைத்து மதிப்பிடுவதுதான். அது உங்களுக்கு மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எத்தனை கேள்விகள் சரி, எத்தனை கேள்விகள் தவறாக எழுதி இருக்கிறோம் என ஆராய்ந்து பார்க்காமல், எழுதியாச்சு அவ்வளவுதான் என்று விட்டுவிட்டு, அடுத்த தேர்வுக்கு தயாராக வேண்டும். பக்கத்து வீட்டு பையன், பெண்ணுடன் ஒப்பிடாதீர்கள்: பெற்றோர்களே உங்கள் கனவை பிள்ளைகள் மீது திணிக்காதீர்கள். அடுத்து போட்டித் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்ற அழுத்தைதை அவர்களுக்கு இப்போதே கொடுக்காமல் ரிசல்ட் எப்படி வந்தாலும் பரவா இல்லை. தைரியமாக போய் எழுது என தோளில் தட்டிக்கொடுங்கள். அதுவே அவர்களை தைரியமாக வைத்துக்கொள்ளும். எப்போதும் பக்கத்து வீட்டுப் பையன், பெண்ணுடன் அவர்களை ஒப்பிட்டு பேசாதீர்கள்.

நீட் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தனியாகவோ, சோகமாகவோ இருந்தால் கவனமாக அவர்களை பார்த்துக்கொள்ளுங்கள். குறைவான மார்க் வருமோ என்று மனதை தளர விடாதே, எவ்வளவோ படிப்புகள் இருக்கிறது, எதற்கும் கவலைப்படாதே, உன்னால் முடியும் என்று ஊக்கம் அளியுங்கள். இவ்வாறு அவர் கூறினார். கல்வியாளர்கள் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறுகையில், உயர்கல்விக்கு பிளஸ் 2 மார்க் முக்கியம்தான் ஆனால் குறைவான மதிப்பெண் பெற்றால் ஒன்றும் பயன் இல்லை என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். மதிப்பெண்ணை விட திறமைதான் உங்களை சரியான பாதையை நோக்கி கொண்டு செல்லும். எனவே உங்களுக்குள் இருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள். உயர்கல்வியை தொடங்கும்போதே போட்டித் தேர்வுக்கு உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் மதிப்பெண் மட்டுமே எதிர்காலம் இல்லை என்றார்.

The post நாளை பிளஸ் 2 தேர்வு தொடங்குகிறது: மாணவர்களே பதற்றமடையாதீங்க… மனசும், உடலும் சீராக இருக்கட்டும்; மனநல மருத்துவர்கள் அட்வைஸ் appeared first on Dinakaran.

Related Stories: