மாதவரம் மண்டலம் 31வது வார்டில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் குளத்தை சீரமைக்க பூமி பூஜை


புழல்: மாதவரம் மண்டலம் 31 வது வார்டு புழல் கதிர்வேடு அடுத்த ஸ்ரீ லட்சுமி நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள ஊத்துக்குளம் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் கிடந்ததுது. இது குறித்து லட்சுமி நகர் மற்றும் சுற்றுவட்டார நகர் பகுதியில் உள்ள பொதுநல சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபு நேரில் சந்தித்து குளத்தை சீரமைத்து நடைப்பயிற்சி செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று கவுன்சிலர் சங்கீதா பாபு மாநகராட்சி உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்ததின் பேரில் மாநகராட்சி சார்பில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் குளத்தை தூர்வாரி சுற்றி கரைகளை பலப்படுத்தி பொதுமக்கள் நடைப்பயிற்சி செல்வதற்கு மின் விளக்கு அமைக்கப்பட்டு பொதுமக்கள் அமர்ந்து செல்வதற்கு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு அழகிய பூங்காவாக செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதன் பூமி பூஜை நேற்று வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் மாதவரம் மண்டல அலுவலர் சின்னதுரை உதவி பொறியாளர் ஜெயலட்சுமி, உதவி பொறியாளர் முகமது ஆசிப் மற்றும் சமூக ஆர்வலர் கதிர்வேடு பாபு, மாநகராட்சி துப்புரவு பணி ஆய்வாளர் சபி, காங்கிரஸ் கட்சி சர்க்கிள் தலைவர் சந்திரசேகர், அகிலன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மாதவரம் மண்டலம் 31வது வார்டில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் குளத்தை சீரமைக்க பூமி பூஜை appeared first on Dinakaran.

Related Stories: