அதை தொடர்ந்து, தேமுதிகவின் பிரேமலதா, சுதீஷ் மற்றும் பாமகவில் அன்புமணி, வாசன், கிருஷ்ணசாமி ஆகியோரை நேரில் சந்தித்து கூட்டணி குறித்து ரகசியமாக பேசி வந்தார். இந்த கட்சி தலைவர்களில் பலர் தேர்தல் செலவுக்கு பணம் வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். ஆனால் பணம் தரமாட்டோம் என்று பேச்சுவார்த்தையை தொடங்கியவர்கள், பின்னர் கொடுக்க சம்மதித்தனர். அதற்கான பேச்சுவார்த்தையும் முடிந்தது. இந்நிலையில், ஜி.கே.வாசன் மட்டும் குழப்பத்தில் இருந்தார். அவருக்கு 4 மக்களவை தொகுதியும் செலவு தொகையும் தருவதாக வேலுமணி உறுதி அளித்துள்ளார். ஆனால் பாஜ கூட்டணியில் வாசனுக்கு 2 சீட்டும், ஒன்றிய அமைச்சர் பதவியும் வழங்கப்படும் என்று அறிவித்தனர். ஒன்றிய அமைச்சர் பதவிக்கு வாசன் ஆசைப்படுகிறார். ஆனால் அதிமுகவுடன் சேர்ந்தால்தான் சட்டமன்ற தேர்தலில் ஒரு சில சீட்டுகளை பெற முடியும். ஆனால், இதுவரை உங்களுடன் பயணித்தோம். எங்களுக்கு எந்த பலனும் இல்லை. உங்களுக்கு மட்டுமே பலன். இப்போதும் உங்கள் நலனைப் பார்த்தால் இருக்கும் தொண்டர்களும் வெளியேறி விடுவார்கள். கட்சியில் நீங்கள் மட்டும்தான் இருக்கும் நிலை உருவாகும் என்று வாசனிடம் நிர்வாகிகள் கூறிவிட்டனர். மேலும், நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுடனும், சட்டப்பேரவை தேர்தலுக்கு அதிமுகவுடனும் கூட்டணி அமைக்க வேலுமணியிடம் வாசன் விருப்பம் தெரிவித்தார். அவரோ வந்தால், இப்போதே வாருங்கள். இல்லாவிட்டால் எப்போதும் வேண்டாம் என கூறிவிட்டார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வாசன் குழப்பத்தில் உள்ளார்.
அதிமுகவுடன் செல்வதே சிறந்தது என கட்சியினர் கூறுவதால் அதிமுகவா, ஒன்றிய அமைச்சர் பதவியா என்று யோசித்து வருகிறார். ஒன்றிய அமைச்சர் பதவியுடன் வெற்றி பெற்றால்தான் உண்டு. பாஜ மீது மக்கள் வெறுப்பு உள்ளது. இதனால், தோற்றால், கண்டிப்பாக மாநிலங்களவை எம்பி கொடுத்து அமைச்சராக்க மாட்டார்கள். எனவே, அதிமுகவுடன் செல்வதே சிறந்தது என கட்சியினர் தெரிவித்தனர். இதனால் முடிவு எடுக்க முடியாமல் அவர் திணறி வருகிறார். அவர் அதிமுகவுடன் செல்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல தேமுதிக, புதிய தமிழகம், பாமக ஆகிய கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பாஜ தமிழக தலைவர் அண்ணாமலையோ யார் வந்தாலும் வராவிட்டாலும் பாஜ தனித்துப் போட்டியிட தயார் என்று கூறி 39 தொகுதிக்கும் பொறுப்பாளர்களை போட்டு வேலைகளை தொடங்கி விட்டார். கூட்டணி கட்சித் தலைவர்களுடன் கலந்து ஆலோசிக்கவில்லை. மேலிடம் மட்டுமே வாசன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் ஆகியோருடன் பேசி வருகிறது. இதனால் பாஜ கூட்டணியில் ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் ஆகியோர் மட்டுமே மிஞ்சுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இன்னும் காலம் இருப்பதால் கூட்டணிக் கட்சிகளை இழுப்பதில் பாஜ மேலிடம் தீவிரமாக இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூட்டணிக் கட்சியினர் தங்களுக்கு தேர்தல் செலவுக்கு யார் அதிக பணம் தருவார்கள் என்று காத்திருக்கின்றனர். இந்த மாதத்திற்குள் கூட்டணியை இறுதி செய்யும் முடிவில் இரு கட்சியினரும் உள்ளதால் கூட்டணிக்குள் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post கடந்த தேர்தலில் கூட்டணி அமைத்த கட்சிகளை இழுக்க அதிமுக, பாஜ போட்டா போட்டி: மாறி, மாறி ரகசிய பேரங்களை நடத்துவதால் பரபரப்பு appeared first on Dinakaran.