சென்னை: சென்னை வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இந்நிலையில், கடந்த 2005ம் ஆண்டு சிங்கப்பூரிலிருந்து கோம்பி (32) என்ற ஆண் மனித குரங்கும், இதன் ஜோடியான கவுரி (33) என்ற பெண் மனித குரங்கும் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டன. இவை இரண்டும் சேர்த்து இனப்பெருக்கம் செய்ததில் ஆதித்யா (4) என்ற ஆண் மனித குரங்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தது. இதில் பெண் மனித குரங்குக்கு கடந்த ஒரு ஆண்டாக சர்க்கரை நோய் இருந்து வந்தது. இதனை தூங்க வைத்து மருத்துவர்கள் தினந்தோறும் சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் அதனை கண்காணித்து வந்தனர்.
இதனையடுத்து பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த பெண் மனித குரங்கு நேற்று முன்தினம் இரவு உடல் நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதனையடுத்து வழக்கம்போல் நேற்று காலை குரங்குகள் பராமரிப்பு கூண்டுக்கு சென்ற பராமரிப்பாளர் பெண் மனித குரங்கு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பூங்கா அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து, பெண் மனித குரங்கை பூங்கா மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து மின் மயானத்தில் தகனம் செய்தனர். இதன் காரணமாக, தந்தை மனித குரங்கான கோம்பியும், குட்டியான ஆதித்யாவும் சோகத்தில் உள்ளன.
