இந்திய அரசியலில் நிதிஷ் குமார் பச்சை சந்தர்ப்பவாதத்தின் அடையாளமாக இருக்கிறார்: தமிமுன் அன்சாரி பேட்டி

திருப்பூர்: இந்திய அரசியலில் நிதிஷ் குமார் பச்சை சந்தர்ப்பவாதத்தின் அடையாளமாக இருக்கிறார் என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுக்கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியினர் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணையும் இணைப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக திருப்பூர் வந்த கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.

தொடர்ந்து பீகார் மாநிலத்தில் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் குறித்து பேசிய அவர்; நிதிஷ் குமார் பச்சை சந்தர்ப்பவாதத்தின் அடையாளமாக மாறி இருக்கிறார் எனவும், நாடு முழுவதும் பாஜகவிற்கு எதிராக வலுவான கூட்டணி அமைந்த நிலையில் அதில் இடம்பெற்றிருந்த நிதீஷ்குமார் 18 மாதங்களுக்கு முன்பு எந்த கூட்டணியில் இருந்து விலகி மாற்றுக் கட்சிகளோடு சேர்ந்து ஆட்சி அமைத்தாரோ மீண்டும் அரசியல் சுயலாபத்திற்காக அதே கூட்டணியில் இணைந்திருப்பது பச்சை சந்தர்ப்பவாதத்தின் அடையாளமாக மாறி இருப்பதை உணர்த்துவதாகவும், அவர் மேற்கொண்டு இருப்பது ஜனநாயக அவமானம் எனவும் பீகார் மக்கள் அவரையும் அவரது கட்சி சார்ந்த கூட்டணியும் தனிமைப்படுத்திட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர் அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் மக்கள் ஆன்மீக நம்பிக்கை கொண்டிருக்கக்கூடிய நிலையில் அதை அரசியலாக பாஜக பார்ப்பதாகவும் குற்றம் சாட்டினார். நாடாளுமன்றத் தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கூட்டணி நிலைப்பாடு என்பதை பிப்ரவரி 10ஆம் தேதி திருச்சியில் நீண்ட கால சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி நடத்தப்பட உள்ள மாபெரும் சிறை முற்றுகை போராட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்படும் எனவும்,

தமிழகத்தில் திராவிட கழகங்கள் ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் அமைந்திட வேண்டும் என்ற நிலையில் கூட்டணிக்கு அழைப்பது என்ற முறையை தவிர்த்து பாரதிய ஜனதா கட்சி அதிமுகவை மிரட்டல் விடுத்து அழைக்கும் போக்கு தவறானது எனவும், தேர்தலுக்கு முன்னதாகவே தனது அராஜக போக்கை துவக்கி விட்டனர். இவர்களை தமிழக மக்களள் அடையாளம் காண வேண்டும், நாட்டு மக்கள் இவர்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

The post இந்திய அரசியலில் நிதிஷ் குமார் பச்சை சந்தர்ப்பவாதத்தின் அடையாளமாக இருக்கிறார்: தமிமுன் அன்சாரி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: