பார்வேட்டை உற்சவ பிரபந்தம் பாடுவதில் வடகலை – தென்கலை பிரிவினர் மோதல்: வலைதளங்களில் வீடியோ வைரல்

சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளின் பழையசீவரம் பார்வேட்டை உற்சவத்தின்போது, பிரபந்தம் பாடுவதில் வடகலை – தென்கலை பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் திகழ்கிறது. ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் தினத்தில் இந்த கோயிலில் இருந்து புறப்படும் வரதராஜபெருமாள், வாலாஜாபாத் அருகேயுள்ள பழையசீவரம் கிராமத்திற்கு எழுந்தருளி பார்வேட்டை உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, கடந்த செவ்வாய்கிழமை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து கண்ணாடி பல்லக்கில் புறப்பட்ட வரதராஜபெருமாள் வாலாஜாபாத், மண்டகப்படி, கண்டருளி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சென்று பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலை மீது எழுந்தருளினார்.  பின்னர், மலையிலிருந்து இறங்கிய வரதராஜ பெருமாளை, பழையசீவரத்தில் கோயில் கொண்டுள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் சுவாமியை அழைத்து செல்ல 2 பெருமாள்களும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

இந்நிலையில், பழையசிவரம் பகுதியில் பார்வேட்டை உற்சவத்தின்போது, பிரபந்தம் பாடுவதில் வடகலை – தென்கலை பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, திடீரென கைகலப்பாக மாறி ஒருவருக்கொருவர் மாறிமாறி தாக்கிக்கொண்டனர். மேலும், வடகலை – தென்கலை பிரிவினருடைய பிரபந்தம் பாடுவது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தற்போது, ஆண்டுக்கு ஒருமுறை தை மாதம் மாட்டுப்பொங்கல் அன்று நடைபெறும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளின் பழையசீவரம் பார்வேட்டை உற்சவத்தின்போது, வடகலை – தென்கலை பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post பார்வேட்டை உற்சவ பிரபந்தம் பாடுவதில் வடகலை – தென்கலை பிரிவினர் மோதல்: வலைதளங்களில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: