செய்யாறு அருகே அதிகாலை விபத்து சுற்றுலா பஸ் புளிய மரத்தில் மோதி 37 பக்தர்கள் படுகாயம்

*வேலூர், ஆம்பூரை சேர்ந்தவர்கள்

செய்யாறு : மேல்மருவத்தூர் கோயிலுக்கு பக்தர்கள் சென்ற சுற்றுலா பஸ், செய்யாறு அருகே அதிகாலை புளிய மரத்தில் மோதியதில் வேலூர், ஆம்பூரை சேர்ந்த 37 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா கீழ்பட்டி மற்றும் அகரம்சேரி ஆகிய கிராமங்கள் மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த பக்தர்கள் மேல் மருவத்தூர் கோயிலுக்கு செல்ல மாலை அணிந்து விரதம் இருந்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு பக்தர்கள் 55 பேர் தனியார் சுற்றுலா பஸ்சில் அகரம்சேரியில் இருந்து மேல்மருவத்தூர் கோயிலுக்கு புறப்பட்டனர். பஸ்சை அதேபகுதியை சேர்ந்த டிரைவர் திவாகர்(38) என்பவர் ஓட்டினார். நேற்று அதிகாலை 3 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு-வந்தவாசி சாலை திரும்பூண்டி புரிசை கிராமம் இடையில் பஸ் சென்றது. அப்போது அங்குள்ள வளைவில் திரும்பியபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோர புளியமரத்தில் மோதியது.

இதில் பஸ்சின் முன்புறம் முற்றிலும் நொறுங்கியது. விபத்தில் பஸ் டிரைவர் திவாகர்(38), கீழ்பட்டியை சேர்ந்த திவாகர்(25), செல்வி(40), சந்திரலேகா(25), ஜலேந்திரா(42), லாவண்யா(30), அஸ்வினி(12), சஞ்சனா(8), பூவரசன் (26), ஜோதி(55), சபர்ணியா(25), புருஷோத்தமன்(69), சரஸ்வதி(55), பாவை(1), சர்மி(11), மகா(10), சித்ரா(46), சுமித்ரா(40), நர்மதா(21), சுஜய்(25), சாமூண்டீஸ்வரி(29), மகேஸ்வரி(43), அமர்நாத்(25). தனலட்சுமி(40), வாணி(37), தமிழரசு(24), ஷாகினி(23), மகாலட்சுமி(19), கண்ணகி(50), அசோகன் (34), அரவிந்தன்(10), ராஜேந்திரன்(52). ரம்யா(33) ஆகியோரும், வேலூர், சத்துவாச்சாரியை சேர்ந்த குபேந்திரா(52), திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த நதியா(37), உட்பட 37 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு செய்யாறில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் 15 பேர் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு மற்றும் வேலூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அனக்காவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post செய்யாறு அருகே அதிகாலை விபத்து சுற்றுலா பஸ் புளிய மரத்தில் மோதி 37 பக்தர்கள் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: