துணைநிலை ஆளுநர் விவகாரம்; நேராக ஏன் சுப்ரீம் கோர்ட் வருகிறீர்கள்?: டெல்லி அரசை கடிந்து கொண்ட தலைமை நீதிபதி

புதுடெல்லி: டெல்லி துணை நிலை ஆளுநர் உடனான விவகாரத்தில், டெல்லி அரசை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கடிந்து கொண்டார். டெல்லி ஆம்ஆத்மி அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே நடக்கும் நிர்வாக ரீதியான மோதல்களால், அவ்வப்போது பிரச்னைகள் ஏற்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக நீதிமன்றங்கள் பல தீர்ப்புகளை வழங்கி உள்ளன. இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு முன்பு,
டெல்லி அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையிலான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கோபமடைந்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தனது அமர்வு முன் விசாரணைக்கு வந்த டெல்லி குழந்தைகள் உரிமை ஆணைய (டிசிபிசிஆர்) வழக்கை, டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி உத்தரவிட்டார். மேலும் அவர், ‘டெல்லி துணைநிலை ஆளுநருடனான ஒவ்வொரு பிரச்னைக்கும், எதற்காக நீங்கள் (டெல்லி அரசு) நேராக உச்ச நீதிமன்றத்திற்கு வருகிறீர்கள்? நேராக நீங்கள் உச்ச நீதிமன்றத்திற்கு வராமல், டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு ஏன் முதலில் செல்லவில்லை? இதுபோன்று ஒவ்வொரு வழக்கையும் நேரடியாக நாங்களே விசாரிக்க முடியாது. அரசியல் சாசனப் பிரச்னைகளை மட்டுமே நேரடியாக விசாரிக்க முடியும்’ என்று டெல்லி அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கடிந்து கொண்டார்.

The post துணைநிலை ஆளுநர் விவகாரம்; நேராக ஏன் சுப்ரீம் கோர்ட் வருகிறீர்கள்?: டெல்லி அரசை கடிந்து கொண்ட தலைமை நீதிபதி appeared first on Dinakaran.

Related Stories: