கோடை சீசன் நடவு பணிகளுக்காக ஊட்டி பூங்காவில் மலர் பாத்திகள் தயார் செய்யும் பணி தீவிரம்

ஊட்டி: கோடை சீசன் நடவு பணிகளுக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் பாத்திகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். கோடை விடுமுறையான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவதால், அந்த மாதங்கள் முதல் சீசனாக அனுசரிக்கப்படுகிறது. கோடை சீசனின் போது தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதையொட்டி பூங்கா முழுவதும் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும். அதேபோல், ஆயிரக்கணக்கான மலர் தொட்டிகள் தயார் செய்யப்பட்டு மாடங்களிலும், புல் மைதானங்களிலும் அலங்கரித்து வைக்கப்படும்.

இதனை பூங்காவிற்கு வரும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். முதல் சீசனுக்காக டிசம்பர் மாதம் முதல் பூங்காவில் விதைப்பு மற்றும் நடவு பணிகள் மேற்கொள்ளப்படும். 5 மாதங்கள் கழித்து ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பூங்காவில் மலர்கள் பூத்துக் குலுங்கும். இதற்காக, தற்போது ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் விதைகள் சேகரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது நடவு பணிகள் துவக்கப்பட உள்ளது. இதற்காக பூங்காவில் உள்ள அனைத்து பாத்திகளும் தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இத்தாலியன் பூங்கா, ஜப்பான் பூங்கா உட்பட பூங்காவின் அனைத்து பகுதிகளிலும் மலர் பாத்திகள் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.

The post கோடை சீசன் நடவு பணிகளுக்காக ஊட்டி பூங்காவில் மலர் பாத்திகள் தயார் செய்யும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: