அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் கவுதம சிகாமணி எம்.பி நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமைச்சர் பொன்முடி கடந்த 2006-2011ம் ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அதிகளவில் செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது 2012ல் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறையினர், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூலை மாதம் சோதனை நடத்தினர்.

அமலாக்கத்துறை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கவுதம சிகாமணி உள்ளிட்ட 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பின்னர் இந்த வழக்கு சென்னை எம்.பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு விசாரணைக்கு வந்தது. கவுதம சிகாமணி எம்.பி, கே.எஸ்.ராஜ மகேந்திரன், வி.ஜெயசந்திரன், கே. சதானந்தம், கோபிநாத் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை 24ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் கவுதம சிகாமணி எம்.பி நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: