கொடைக்கானல் : பெருமாள் மலைப் பகுதியில் இருந்து கொடைக்கானல் அப்சர்வேட்டரி வரைநெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கொடைக்கானல் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜன் கூறுகையில், கொடைக்கானல் வத்தலக்குண்டு நெடுஞ்சாலை பகுதியில் பெருமாள் மலைப் பகுதியில் இருந்து கொடைக்கானல் அப்சர்வேட்டரி வரை உள்ள ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும்.
இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. வருவாய் துறை, நகராட்சி துறையினரிடமும் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது. கொடைக்கானல் பழனி சாலை, கொடைக்கானல் தாண்டிக்குடி சாலை ,கொடைக்கானல் அடுக்கம் கும்பக்கரை சாலை ஆகிய சாலைகளில் இருபுறமும் உள்ள புதர் செடிகள் அகற்றும் பணி நடைபெற்றுக் கொண்டு உள்ளது.
விரைவில் இந்த புதர் செடிகள் அனைத்தும் அகற்றப்படும். கொடைக்கானல் அடுக்கம் மலைச்சாலை போக்குவரத்திற்கு தயாராக உள்ளது. சிறிய ரக வாகனங்கள் சென்றுவர முடியும். மழையால் ஏற்பட்ட சரிவுகள் அனைத்தும் சீர் செய்யப்பட்டு தற்போது போக்குவரத்திற்கு தயாராக உள்ளது. கொடைக்கானலில் விடுமுறை காலங்களிலும், வார இறுதி நாட்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதற்கு தீர்வு ஏற்படுத்துவதற்கு சிறப்பு தனி குழுவினர் விரைவில் ஆய்வு செய்ய உள்ளனர். இந்த குழுவினர் குறுகிய சாலைப் பகுதிகளில் ஆய்வு செய்து அகலப்படுத்துவதற்குரிய ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். அந்த குழுவினர் கொடுக்கும் அறிக்கைப்படி கொடைக்கானல் மலைச்சாலை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன் பின்னர் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post பெருமாள் மலைப் பகுதியில் இருந்து கொடைக்கானல் அப்சர்வேட்டரி வரை நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் appeared first on Dinakaran.