ஓசூர் : ஓசூரில், உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், விதி மீறி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2.5 கிலோ சாக்லெட் கைப்பற்றப்பட்டது. அதனை பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஓசூர் கடைவீதி, நாமல்பேட்டை, எம்.ஜி. ரோடு உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் கடைகளில் குழந்தைகளை கவரும் விதத்தில் சிரெஞ்சில் அடைக்கப்பட்ட சாக்கெலட்டுகள் விற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கலெக்டர் சரயு உத்தரவின்பேரில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வெங்கடேசன் அறிவுறுத்தலின்படி, ஓசூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்து மாரியப்பன் தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில், சுமார் 2.5 கிலோ சிரெஞ்ச் சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றிலிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதணைக்காக உணவுப பகுப்பாய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் முத்து மாரியப்பன் கூறுகையில், ‘பறிமுதல் செய்யப்பட்ட சாக்லெட் உறைகளில் தயாரிப்பு தேதி- பேட்ச் நம்பர், எப்எஸ்எஸ்ஐ உரிமம் எண் எதுவும் இல்லை. யாரிடமிருந்து அவை வாங்கப்பட்டது என்பதற்கான பில் ஏதும் விற்பனையாளர்களிடம் இல்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின் படி நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆய்வறிக்கை கிடைத்ததும், அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார். மேலும், முறையாக லேபில் அறிவிப்பு இல்லாத உணவுப்பொருடகளை வாங்கி விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
The post ஓசூரில் அதிகாரிகள் சோதனை விதிமுறை மீறி விற்கப்பட்ட 2.5 கிலோ சாக்லெட் பறிமுதல் appeared first on Dinakaran.