2023-2024 ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கையில், ”பொருளாதாரத்தில் பின்தங்கிய இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் பொன்தாலி உட்பட ரூ.50,000/- மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி ஒரு மண்டலத்திற்கு 30 இணைகள் வீதம் 600 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படும்” என அறிவிக்கப்பட்டது. அதன் முதற்கட்டமாக 07.07.2023 அன்று சென்னை மண்டலத்திற்குட்பட்ட 34 இணைகளுக்கு சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, இன்று (11.09.2023), திருவான்மியூர், மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில் 20 இணைகளுக்கு திருமணத்தை அமைச்சர் துரைமுருகன் நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருட்களை வழங்கி, மணமக்களை வாழ்த்தினார்.
திருமணம் செய்து கொண்ட இணைகளுக்கு 4 கிராம் மாங்கல்யத்துடன் சீர்வரிசைப் பொருட்களாக கட்டில், பீரோ, மெத்தை, தலையணைகள், சமையல் எரிவாயு அடுப்பு, மிக்சி, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட 28 வகையான பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் சேகர்பாபு, மயிலம் பொம்மபுர ஆதீனம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் ஜே.எம்.எச்.அசன் மவுலானா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் க.மணிவாசன், ஆணையர் க.வீ.முரளீதரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 20 இணைகளுக்கு திருமணம்: அமைச்சர் துரைமுருகன் தலைமையேற்று நடத்தி வைத்தார் appeared first on Dinakaran.