கமுதி அருகே இலந்தை முள் படுக்கையில் படுத்து அருள்வாக்கு கூறிய பூசாரி: ஆடி பொங்கல் திருவிழாவில் பரவசம்

கமுதி: கமுதி அருகே, கரியமல்லம்மன் கோயில் ஆடி பொங்கல் திருவிழாவில் இலந்தை முள் படுக்கையில் படுத்து பூசாரி அருள்வாக்கு கூறியது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே, பாம்புல்நாயக்கன்பட்டியில் உள்ள கரியமல்லம்மன் கோயிலில் ஆடி பொங்கல் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் அம்மனுக்கு விசேஷ பூஜை, அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து அம்மனை வழிபட்டு வந்தனர். நேற்று முன்தினம் ஏராளமான பக்தர்கள் கோயில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். விடிய விடிய ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி, ஆயிரங்கண் பானை, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நேற்று 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் உடலில் சேறு பூசி கோயிலில் இருந்து மேள தாளத்துடன் நடனமாடி ஊரை நகர் வலம் வந்து கரியமல்லமனை வழிபட்டனர். மாலையில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் வைக்கோலை திணித்த சாக்கு ஆடை அணிந்து ஊர்வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முக்கிய வீதி வழியாக எடுத்து வரப்பட்ட 500க்கும் மேற்பட்ட முளைப்பாரிகள் கண்மாயில் கரைக்கப்பட்டன. பின்னர் கோயில் பூசாரி இலந்தை முள் படுக்கையில் படுத்து 50க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கரியமல்லம்மனை தரிசனம் செய்தனர்.

The post கமுதி அருகே இலந்தை முள் படுக்கையில் படுத்து அருள்வாக்கு கூறிய பூசாரி: ஆடி பொங்கல் திருவிழாவில் பரவசம் appeared first on Dinakaran.

Related Stories: