ஜெ. உருவபொம்மை மீது தேசிய கொடியை போர்த்தி பிரசாரத்தில் ஈடுபட்டதாக வழக்கு: மாஃபா பாண்டியராஜன் மீதான வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்..!!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டிய ராஜனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2017ல் ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டிய ராஜன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவபொம்மை மீது தேசிய கொடியை போர்த்தி பிரசாரத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக இந்திய தண்டனை சட்டம், தேசிய சின்னங்கள் அவமதிப்பு தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், குப்பன், அழகு தமிழ்ச்செல்வி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் 3 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், எந்தவொரு குற்றச்சாட்டும் நிரூபணமாகவில்லை என்றும் அதற்கு ஆதாரங்கள் இல்லை என்றும் வாதிடப்பட்டது.

மேலும் சட்டவிதிகளை பின்பற்றி இந்த வழக்கானது பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், வாக்காளர்களின் அனுதாபத்தை பெறுவதற்காக மட்டுமே ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது, எந்த வகையிலும் வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தாது என்று குறிப்பிட்டார். மேலும் தேசிய கொடியை அவமதித்ததாக கருத முடியாது எனவும் விதிகளை முறையாக பின்பற்றாமல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதால் இந்த மூவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்வதாகவும் உத்தரவிட்டார்.

The post ஜெ. உருவபொம்மை மீது தேசிய கொடியை போர்த்தி பிரசாரத்தில் ஈடுபட்டதாக வழக்கு: மாஃபா பாண்டியராஜன் மீதான வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்..!! appeared first on Dinakaran.

Related Stories: