கோவை அருகே விபத்தில் சிக்கிய காரில் இருந்து மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பறிமுதல்

கோவை: கோவை சுந்தராபுரம் அருகே சாலை விபத்தில் சிக்கிய காரில் இருந்து மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த சொகுசு கார், காலை சுமார் 8.45 மணியளவில் சுந்தராபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த மின்கம்பத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இதையடுத்து காரில் இருந்த 2 நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். விபத்து குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காரில் சோதனையிட்டபோது அதில் மூட்டை மூட்டையாக குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

காரில் இருந்த 30க்கும் மேற்பட்ட மூட்டைகளை கைப்பற்றி காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் விபத்திற்குள்ளான காரை பொக்லைன் உதவியுடன் போலீசார் அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து சுந்தராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காரை இயக்கிவந்தவர்கள் யார் எனவும் எங்கிருந்து இந்த குட்கா பொருட்கள் கொண்டு வரப்பட்டது எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தப்பி சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோவை அருகே விபத்தில் சிக்கிய காரில் இருந்து மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: