தஞ்சையில் ரூ.5.50 கோடியில் பூ மாலை வணிக வளாகம் காணொளியில் முதல்வர் திறப்பு

தஞ்சாவூர்: தஞ்சையில் ரூ.5.50 கோடியில் கட்டப்பட்ட பூ மாலை வணிக வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வழியாக திறந்து வைத்தார். மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளில் சந்தைப்படுத்தும் பொருட்டு பல்வேறு வகையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் மாவட்ட அளவிலான வணிக வளாகம், பொன்விழா கிராம சுய வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் தலா ரூ.28 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளன. இவ்வளாகங்களில் கடைகள், கூட்ட அரங்குகள், ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி கழிப்பறை வசதிகள் உள்ளன. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை ரெயிலடி அருகில் மாவட்ட அளவிலாள வணிக வளாகம் (பூமாலை வணிக வளாகம்) ரூ.28 லட்சம் செலவில் கட்டப்பட்டு இயங்கி வந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டபேரவையில் 2022-ம் ஆண்டு மார்ச் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கையில் மாவட்டங்களில் உள்ள பூமாலை வணிக வளாகங்கள் ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் புதுப்பிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, பூமாலை வணிக வளாகத்தினை சிறப்பான முறையில் மேம்படுத்தி பொதுமக்களை கவரும் வகையில் தரம் உயர்த்தி பழுது பார்த்தல், உள்கட்டமைப்பு மேம்படுத்தல், சுற்றுச்சுவர் அமைத்தல் போன்ற திட்டப்பணிகள் புதுப்பிக்கப்பட்டு நிறைவு பெற்றதால் நேற்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து பூ மாலை வணிக வளாகத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப், கூடுதல் கலெக்டர் காந்த், டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். பின்னர் பூ மாலை வணிக வளாகத்தில் உள்ள கடைகளை பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post தஞ்சையில் ரூ.5.50 கோடியில் பூ மாலை வணிக வளாகம் காணொளியில் முதல்வர் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: