பைக்- மொபட் நேருக்கு நேர் மோதி 9 மாத பெண் குழந்தை பலி அணைக்கட்டு அருகே சோகம் தடுப்பூசி போடுவதற்காக சென்றபோது

அணைக்கட்டு, ஜூன் 25: அணைக்கட்டு அருகே பைக் மீது மொபட் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தடுப்பூசி போடுவதற்காக அழைத்து செல்லப்பட்ட 9 மாத ெபண் குழந்தை பரிதாபமாக இறந்தது. மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா ஒடுக்கத்தூர் அடுத்த சேர்ப்பாடி கெங்கசானிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(27). இவரது மனைவி பத்மாவதி(23). இவர்களது 9 மாத பெண் குழந்தை டர்ஷிதா. இந்த குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக நேற்று முன்தினம் வெங்கடேசன் பைக்கில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். அவரது மனைவி பத்மாவதி குழந்தையுடன் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்தார். மேலும் பைக்கின் முன்பக்கம் வெங்கடேசனின் அக்கா மகளான மோனிதா(4) என்ற சிறுமியை அமர வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் அணைக்கட்டு அடுத்த நாராயணபுரம் கோயில் அருகே சென்றபோது, எதிரே பெண் ஒட்டி வந்த மொபட் வெங்கடேசன் வந்த பைக் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் நிலைதடுமாறி வெங்கடேசன் உட்பட நான்கு பேரும் கீழே விழுந்தனர். இதில் வெங்கடேசன் அவரது மனைவிக்கு லேசான காயம் ஏற்பட்டது. குழந்தை டர்ஷிதாவுக்கு வலது பக்க தலையில் படுகாயம் ஏற்பட்டது. சிறுமி மோனிதாஸ்ரீக்கும் காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், அங்கிருந்து குழந்தை டர்ஷிதாவை மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மதியம் குழந்தை டர்ஷிதா பரிதாபமாக உயிரிழந்தது. இதுதொடர்பாக வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில், அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பைக் மீது மோதிய மொபட்டில் வந்த நாராயணபுரத்தை சேர்ந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பைக் விபத்தில் ஒன்பது மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post பைக்- மொபட் நேருக்கு நேர் மோதி 9 மாத பெண் குழந்தை பலி அணைக்கட்டு அருகே சோகம் தடுப்பூசி போடுவதற்காக சென்றபோது appeared first on Dinakaran.

Related Stories: