சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்குகளின் விசாரணை தொடங்கியது. ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்குகளின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் அதிமுக, இபிஎஸ் தரப்பு வாதங்கள் தொடங்கின. உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது.
பொதுக்குழு முடிவுகளே இறுதியானது:
எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதங்களை முன்வைத்து வருகிறார். பொதுக்குழு அதிகாரம் குறித்து பேசிய அவர், கட்சி விவகாரங்கள் தொடர்பாக பொதுக்குழு எடுக்கும் முடிவுகளே இறுதியானது. கட்சியின் அனைத்து முடிவுகளையும் அடிப்படை தொண்டர்களிடம் கேட்டு எடுக்க முடியாது என தெரிவித்தார்.
கட்சியின் விதிகளுக்கு மேலானவர்கள் யாருமில்லை:
கட்சியின் விதிகளுக்கு மேலானவர்கள் யாருமில்லை. கட்சி விதியை மீறினால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மீதே நடவடிக்கை எடுக்க முடியும். கட்சியின் கொள்கை உள்ளிட்ட விவகாரங்களை மட்டுமே பொதுக்குழு தீர்மானிக்க முடியும் என்பதல்ல. ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என கூறினார்.
உச்சபட்ச அதிகாரம் கொண்டது பொதுக்குழு:
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை விட உச்சபட்ச அதிகாரம் கொண்டது பொதுக்குழு என எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் முன்வைத்து வருகிறது. அதிமுக உறுப்பினர்கள் முதல் நிர்வாகிகள் வரை கட்சி விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள். தமிழகம் முழுவதும் தனியாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார் ஓபிஎஸ் என தெரிவித்தார்.
The post “கட்சி விதிப்படி பொதுக்குழு எடுக்கும் முடிவுகளே இறுதியானது”: அதிமுக பொதுச்செயலாளர் வழக்கில் இபிஎஸ் தரப்பு வாதம்..!! appeared first on Dinakaran.