நாட்டரசன்பட்டு – தாம்பரம் வரை மாநகர பேருந்து சேவை துவக்கம்: கிராம மக்கள் மகிழ்ச்சி

பெரும்புதூர், ஜூன் 8: குன்றத்தூர் ஒன்றியம், நாட்டரசன்பட்டு முதல் தாம்பரம் வரை மாநகர பேருந்து சேவை துவங்கப்பட்டதால், அக்கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், செரப்பணஞ்சேரி ஊராட்சி நாவலூர் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், 2048 குடியிருப்பு கொண்ட அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளன. வரதராஜபுரம், ஆதனூர், மண்ணிவாக்கம், அரும்பாக்கம், கூடுவாஞ்சேரி, சென்னை எம்ஜிஆர், காலனி, அமைந்தகரை உள்ளிட்ட பகுதியில் ஆற்று வரவுக்கால்வாய், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து வசித்து வந்த சுமார் 2000 குடும்பங்களை அங்கிருந்து அகற்றி, படப்பை அடுத்த நாவலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில், வருவாய்துறை சார்பில் குடியமர்த்தபட்டனர்.

தற்போது, இந்த குடியிருப்பில் சுமார் 1500க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும், நாட்டரசன்பட்டு, பனப்பாக்கம், ஆகிய பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும், இப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஒரகடம், படப்பை, தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்சாலைகளுக்கு சென்று வருகின்றனர். தற்போது, நாட்டரசன்பட்டு முதல் தாம்பரம் வரை அரசு பேருந்து இயக்க வேண்டும் என்று மேற்கண்ட கிராமமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, தாம்பரம் முதல் நாட்டரசன்பட்டு வரை தடம் எண் (79என்) மாநகர பேருந்து நேற்று முன்தினம் இயக்கப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் பேருந்து இயக்கபட்டதால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post நாட்டரசன்பட்டு – தாம்பரம் வரை மாநகர பேருந்து சேவை துவக்கம்: கிராம மக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: