‘என் ஆன்மா சாந்தியடைய குடிக்க வேண்டாம்’; தந்தை மது பழக்கத்தால் தற்கொலை செய்த மகள்: உருக்கமான கடிதம்

குடியாத்தம்:தந்தையின் மது பழக்கத்தால் மன வேதனை அடைந்த 16 வயதுள்ள அவரது மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் ‘என் ஆன்மா சாந்தி அடைய தந்தை குடிக்கக்கூடாது’ என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சின்னராஜாகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு(43), கூலித்தொழிலாளி. இவரது மனைவி கற்பகம்(40). மகள் விஷ்ணுபிரியா(16), அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். பிரபு மது குடித்துவிட்டு வந்து அடிக்கடி வீட்டில் மனைவியுடன் தகராறு செய்வாராம். பெற்றோர் அடிக்கடி சண்டை போடுவதால் விஷ்ணுபிரியா மனவேதனையில் இருந்துள்ளார். பலமுறை தனது தந்தையிடம், மது குடிக்க வேண்டாம். அம்மாவிடம் தகராறு செய்ய வேண்டாம் எனக்கூறியுள்ளார். ஆனால் இதை பிரபு கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது.

இதனால், நேற்று விஷ்ணுபிரியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் விஷ்ணுபிரியா எழுதியிருந்த உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

அதில், ‘எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனது தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தவும். எனது குடும்பம் எப்பொழுது மகிழ்ச்சியாக இருப்பதை காண்பேனோ, அப்பொழுதுதான் என் ஆன்மா சாந்தி அடையும். இப்படிக்கு பி.விஷ்ணுபிரியா. போயிட்டு வரேன்’ என எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ‘என் ஆன்மா சாந்தியடைய குடிக்க வேண்டாம்’; தந்தை மது பழக்கத்தால் தற்கொலை செய்த மகள்: உருக்கமான கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: