கோரமண்டல் ரயில் விபத்து; தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் நிலை என்ன? மீட்புப் பணிகளை விரைவுபடுத்துக : அன்புமணி கோரிக்கை.

சென்னை : சென்னை கோரமண்டல் தொடர்வண்டி தடம்புரண்ட விபத்துக்குள்ளான நிலையில், அந்த ரயிலில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் நிலை என்ன? என கேள்வியெழுப்பியுள்ள அன்புமணி ராமதாஸ், மீட்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒடிஷா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தின் பாஹானாகா தொடர்வண்டி நிலையத்தில் ஷாலிமார் – சென்னை கோரமண்டல் விரைவுத் தொடர்வண்டி, இன்னொரு பயணிகள் தொடர்வண்டி மீது மோதியதால், அதன் பல பெட்டிகள் தடம் புரண்டதாக வந்துள்ள செய்திகள் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கின்றன. உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ செய்திகள் எதுவும் வெளிவரவில்லை என்றாலும் கூட , 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும், ஏறக்குறைய 50 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் கவலையளிக்கின்றன. அப்படி ஏதும் நடந்திருக்கக் கூடாது என்று மனம் பதைபதைக்கிறது.

சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த அந்தத் தொடர்வண்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அவர்களின் நிலை என்ன? என்ற கவலையில் அவர்களின் குடும்பத்தினர் தவிக்கின்றனர். மத்திய அரசும், ஒதிஷா மாநில அரசும் இணைந்து மீட்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மீட்புப்பணிகளுக்குத் தேவையான உதவிகளை அண்டை மாநிலங்களும் வழங்க வேண்டும். காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கோரமண்டல் தொடர்வண்டியில் பயணம் செய்த தமிழர்களின் நிலை குறித்து அவர்களின் குடும்பத்தினர் தெரிந்து கொள்ள தமிழில் தொடர்பு கொள்ளும் வகையில் தகவல் உதவி மையத்தை தமிழக அரசும், தெற்கு தொடர்வண்டித்துறையும் இணைந்து ஏற்படுத்த வேண்டும்.

தொடர்வண்டி விபத்தில் காயமடைந்த அனைவரும் உடல்நலம் பெற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்ததாக அஞ்சப்படுவோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post கோரமண்டல் ரயில் விபத்து; தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் நிலை என்ன? மீட்புப் பணிகளை விரைவுபடுத்துக : அன்புமணி கோரிக்கை. appeared first on Dinakaran.

Related Stories: