நாடு முழுவதும் மே மாத மின்தேவை 1.04 சதவீதம் அதிகரிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த மாதம் மின்சாரத்தின் பயன்பாடு 1.04 சதவீதம் அதிகரித்ததாக அரசின் புள்ளி விவரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் இந்தாண்டு மே மாதம் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக கோடை காலத்தில் வெப்பம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. மக்களும் ஏசி, மின் விசிறியை அதிகமாக பயன்படுத்தவில்லை. இருப்பினும் மே மாதம் நாட்டின் மின்சாரத்தின் பயன்பாடு 1.04 சதவீதம் அதிகரித்தது. மே மாதத்தில் மொத்தம் 13,650 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தியுள்ளனர்.

ஆனால் ஒரு வருடத்துக்கு முன் இதே காலக்கட்டத்தில் நாட்டின் மின் பயன்பாடு 13,500 கோடி யூனிட்டாகவும், அதற்கு முந்தைய ஆண்டில் 10,880 கோடி யூனிட்டாகவும் இருந்தது. இதுகுறித்து ஒன்றிய மின் துறை அதிகாரிகள் கூறுகையில்,‘‘ இந்தாண்டு கோடை காலத்தில் நாட்டின் மின் தேவை 229 கிகாவாட் ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் மழை காரணமாக மின் தேவை எதிர்பார்த்த அளவை எட்டவில்லை. ஆனால் இந்த மாதம் முதல் மின் தேவை சற்று அதிகரிக்கலாம்’’ என்றனர்.

The post நாடு முழுவதும் மே மாத மின்தேவை 1.04 சதவீதம் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: