ஆறுமுகநேரி, மே 31: ஆறுமுகநேரி அருகே சென்டிரிங் தொழிலாளியை கத்தியால் வெட்டிய சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆறுமுகநேரியை அடுத்த செல்வராஜபுரத்தைச் சேர்ந்தவர் சுகுமார் (30), சென்டிரிங் தொழிலாளி. 28ம் தேதி மாலை 5.15 மணியளவில் சுகுமாரும், அவரது தம்பி தர்மலிங்கம் மற்றும் ஜெயலிங்கம் ஆகியோர் தங்கள் வீட்டு முன்பு லோடு ஆட்டோவில் சென்டிரிங் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அதே ஊர், நடராஜ் நகரைச் சேர்ந்த சபின்ராஜா (25), சிவகுமார் (25) ஆகியோர் பைக்கில் வேகமாக சென்றனர். இதை சுகுமார் தட்டிக் கேட்டார். இதில் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து சபின்ராஜாவும், சிவகுமாரும் மீண்டும் சுகுமார் வீட்டு முன்பு வந்து தகராறு செய்தனர். மேலும் சுகுமாரை, சபின்ராஜா கத்தியால் வெட்டியதோடு அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இதைப் பார்த்து சுகுமாரின் தம்பி தர்மலிங்கம் சத்தம் போடவே 2 பேரும் பைக்கில் தப்பியோடி விட்டனர். காயமடைந்த சுகுமார் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. எஸ்ஐ வேல்பாண்டியன் வழக்கு பதிவு செய்தார். திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ் விசாரணை நடத்தி சபின்ராஜா, சிவகுமார் ஆகியோரை கைது செய்தார்.
The post ஆறுமுகநேரி அருகே சென்டிரிங் தொழிலாளியை வெட்டிய 2 பேர் கைது appeared first on Dinakaran.