அசையா சொத்துகள் எதுவும் கிடையாது ரூ.36.3 கோடி சொத்து முடக்கத்துக்கும் அறக்கட்டளைக்கும் சம்பந்தம் இல்லை: உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை அறிவிப்பு

சென்னை: ரூ.36.3 கோடி மதிப்பிலான சொத்து முடக்கத்திற்கும் எங்கள் அறக்கட்டளைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு, எவ்விதமான அசையா சொத்தும் கிடையாது என அறக்கட்டளையின் அறங்காவலர் பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் அறங்காவலர் பாபு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்கள் பணியை மட்டுமே ஒரே நோக்கமாகக் கொண்டு 2012 டிசம்பர் 12ம் தேதி உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது. அதற்கு பிறகு 12AA, J0G, CSR அங்கீகாரமும் முறையாகப் பெறப்பட்டது. அறக்கட்டளை பதிவு செய்யப்பட்ட நாள் முதல் கல்வி, மருத்துவ உதவிகள், தானியங்கிக் கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரம், அரசு குழந்தைகள் மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள், அவசர ஊர்தி சேவை; நடமாடும் நூலகம், மக்கள் மற்றும் குழந்தைகளின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு பூங்காக்கள் புதுப்பித்தல் போன்ற பல்வேறு மக்கள் நலப்பணிகளைச் செய்து வருகிறது.

அறக்கட்டளை பெற்றுள்ள நன்கொடைகளின் விவரங்களையும், அறக்கட்டளையின் வாயிலாக நாங்கள் செய்துள்ள நலப்பணிகளுக்கான வரவு-செலவு கணக்குகளையும் முறையாக வருமான வரித்துறையிடம் சமர்ப்பித்து வருகிறோம்.
அமலாக்கத்துறையின் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் ரூ.36.3 கோடி மதிப்பிலான சொத்து முடக்கத்திற்கும் எங்கள் அறக்கட்டளைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இப்பொழுது அமலாக்கத்துறை முடக்கிய ரூ.34.7 லட்சத்திற்கான தகுந்த ஆவணங்களைக் கொடுத்து அதனை சட்டப்படி மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை, முழுக்க முழுக்க மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு களப்பணியாற்றுகிறது. உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை என்றும் அறத்தின் வழி மட்டுமே நடக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post அசையா சொத்துகள் எதுவும் கிடையாது ரூ.36.3 கோடி சொத்து முடக்கத்துக்கும் அறக்கட்டளைக்கும் சம்பந்தம் இல்லை: உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: