அரசின் கட்டணமில்லா பஸ் சேவை 2 ஆண்டுகளில் 1.60 கோடி பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் பயன்

திருவாரூர், மே 27: திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டு காலத்தில் அரசின் கட்டணமில்லா பஸ் சேவை மூலம் ஒரு கோடியே 60 லட்சம் பேர் பயனடைந்துள்ள நிலையில் இதற்கு காரணமான தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் பயனாளிகள் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில் தனிபெரும்பான்மையுடன் அதிக இடங்களை பிடித்த திமுக ஆட்சி அமைத்தது. அதே ஆண்டு மே மாதம் 7ம் தேதி முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற அன்றே மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அன்று முதல் அவரது தலைமையிலான அரசு தற்போது வரையில் மக்களுக்கான பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

அதன்படி மகளிருக்கு அரசு நகர பஸ்களில் கட்டணமில்லா பயணம், பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ 3 குறைப்பு என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது மட்டுமின்றி விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களையும் செயல்ப்படுத்தி வருகிறது. மேலும் தேர்தலின் போது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் பொது மக்களிடம் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காணும் வகையில் இதற்கென தனியாக ஐ.ஏ.எஸ் தலைமையிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டு மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது.

அதன் பின்னரும் தற்போது வரையில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் மனுக்கள் பெற்றப்பட்டு மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு, நகர பஸ்களில் மகளிருக்கு கட்டணமில்லா பஸ் சேவை என்ற திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பணிக்கு செல்லும் மகளிர்கள் மட்டுமின்றி தினகூலிகளாக வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றி வரும் பெண்களும் பயனடைந்து வருகின்றனர்.

இதில் குறிப்பாக மளிகை கடை, ஜவுளி கடை, மருந்து கடை உள்ளிட்ட பல்வேறு சிறு வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றி வரும் பெண்களுக்கு அவர்களின் பணிக்கு ஏற்ப மாத சம்பளம் தவிர தினபடியாக ரூ 30 முதல் 50 வரையில் வழங்கப்பட்டு வரும் நிலையில் இதில் பெரும்பாலனவர்கள் தங்களது வீடுகளிலிருந்து வர்த்தக நிறுவனங்களுக்கு பஸ்களிலேயே வந்து செல்லும் நிலை இருந்து வந்ததால் தற்போது பஸ் கட்டணம் என்பது முற்றிலுமாக இல்லாமல் இருந்து வருவதால் இந்த தினபடி தொகை முழுவதும் அவர்களது சேமிப்பிற்கும், பிற செலவுகளுக்கும் உதவி வருவதால் இவ்வாறு பணிக்கு செல்லும் பெண்கள் அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றியினை தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமின்றி ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் விவசாய கூலிகள் போன்றவர்கள் வெளியூர்களில் வசித்து வரும் தங்களது குடும்ப உறவினர்களை பார்பதற்கோ அல்லது மருத்துவமனைக்கு செல்வதற்கோ, துக்கம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கோ பஸ்சில் பயணம் செய்யும் பட்சத்தில் கட்டணத்திற்காக தங்களது கணவரை நம்பியிருந்த காலம் மாறி தற்போது கட்டணமில்லா இந்த சேவை மூலம் பெண்கள் பலரும் தங்களது விருப்பத்திற்கேற்ப வெளியூர் சென்று வருவதால் இதற்கும் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

பெண்கள் மட்டுமின்றி மாற்றுதிறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் இதே போன்று கட்டணமில்லா பஸ் சேவை கிடைத்து வருவதால் அவர்களும் அரசை பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி மற்றும் நன்னலம் என 4 அரசு போக்குவரத்து கழக கிளைகள் மூலம் மகளிர் சேவைக்காக மொத்தம் 52 பஸ்கள் இயங்கி வரும் நிலையில் இந்த பஸ்கள் மூலம் இதுவரையில் கடந்த 2 ஆண்டு காலத்தில் மொத்தம் ஒரு கோடியே 60 லட்சம் பேர் பயனடைந்துள்ள நிலையில் இவ்வாறு பயனடைந்துள்ள மகளிர், மாற்றுதிறனாளிகள் மற்றும் திருநங்கைகள் உட்பட அனைவரும் அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

The post அரசின் கட்டணமில்லா பஸ் சேவை 2 ஆண்டுகளில் 1.60 கோடி பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் பயன் appeared first on Dinakaran.

Related Stories: