ஒடுகத்தூர் அடுத்த ஆசனாம்பட்டு கிராமத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த தேசத்து மாரியம்மன் சிரசு: ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஒடுகத்தூர்: ஒடுகத்தூர் அடுத்த ஆசனாம்பட்டு கிராமத்தில் தேசத்து மாரியம்மனை திரளான பக்தர்கள் வழிபட்டு ஆடு, கோழிகளை பலியிட்டு தங்களின் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த ஆசனாம்பட்டு கிராமத்தில் பழமையான தேசத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும் வைகாசி மாதம் 10ம் தேதி தேசத்து மாரியம்மன் சிரசு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி தேசத்து மாரியம்மன் கோயிலில் 132ம் ஆண்டு திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதற்காக நேற்று காலை அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இன்று காலை 6 மணியளவில் தேசத்து மாரியம்மன் சிரசுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்களின் பெரும் வெள்ளத்தில் தாரை தப்பட்டை முழங்க அம்மன் சிரசு ஊர்வலமாக சென்றது. அப்போது, பக்தர்கள் தங்களின் நேர்த்தி கடனுக்காக ஆடு, கோழிகளை பலியிட்டனர். தொடந்து, அம்மனுக்கு காசு மாலை, வண்ண மலர்களை கொண்டு சிறப்பு செய்தனர். காலை 6 மணிக்கு தொடங்கிய ஊர்வலம் மதியம் 2 வரை தொடந்து நடைபெற்றது. இதில், ஒடுகத்தூர் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post ஒடுகத்தூர் அடுத்த ஆசனாம்பட்டு கிராமத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த தேசத்து மாரியம்மன் சிரசு: ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Related Stories: