தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பினை வழங்கியது. அந்த தீர்ப்பில், “ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத் திருத்தம் செல்லும். ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசின் சட்டம் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இல்லை. ஜல்லிக்கட்டு கலாச்சார அடையாளம் என சட்டப்பேரவை சட்டம் இயற்றும்போது நீதிமன்றத்தால் மறுக்க இயலாது. ஜல்லிக்கட்டுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்கிறோம்,” இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது!.தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம். வரும் சனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம்.” என்று பதிவிட்டுள்ளார்.

The post தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: