சென்னையில் 2 நாள் ரஷ்யா உயர் கல்வி கண்காட்சி

சென்னை: ரஷ்யாவில் உயர்க்கல்வி பயில்வது தொடர்பான 2ம் கட்ட கண்காட்சி சென்னையில் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. ரஷ்யாவில் உயர்க்கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்களுக்காக, அந்நாட்டு பல்கலைக் கழகங்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கல்வி கண்காட்சியை இந்தியாவில் நடத்துவது வழக்கம். அதன்படி நடப்பாண்டில் மாணவர் சேர்க்கைக்காக ரஷ்ய உயர்க்கல்வித்துறை மற்றும் ஸ்டடி அப்ராட் எஜுகேஷனல் கன்சல்டன்ட் சேர்ந்து தமிழ்நாட்டில் கல்வி கண்காட்சியை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே முதற் கட்ட கண்காட்சி நடைபெற்று முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட கண்காட்சியானது சென்னையில் இன்று மற்றும் நாளை (ஜூன் 22,23) ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற உள்ளது.

எம்.பி.பி.எஸ். மட்டுமல்லாது பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளில் இளநிலை பட்டங்களுக்கும் ஸ்பாட் அட்மிஷன் வழங்கப்பட உள்ளது. மேலும் ஜூன் 25ம் தேதி மதுரை ரெசிடென்சி ஹோட்டலிலும், ஜூன் 26 திருச்சி ஃபெமினா ஹோட்டலிலும், ஜூன் 27 சேலம் ஜி.ஆர்.டி. ஸைப் ஹோட்டலிலும், ஜூன் 28 கோவை தி கிராண்ட் ரீஜெண்டிலும் இந்தக் கண்காட்சி நடைபெற உள்ளது. கடந்த காலங்களைப் போலவே, ரஷ்ய அரசாங்கத்தின் வருடாந்திர உதவித்தொகை திட்டம் வழியாக இந்த ஆண்டும் 200 இந்திய மாணவர்களுக்கு 100% உதவித்தொகை வழங்கப்படும். இதன் மூலம் ரஷ்யாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை, பட்ட மேற்படிப்புத் திட்டங்களை இலவசமாக அவர்கள் படிக்க முடியும் என தென்னிந்தியாவுக்கான ரஷ்ய தூதரகத்தினர் தெரிவித்துள்ளனர்.

The post சென்னையில் 2 நாள் ரஷ்யா உயர் கல்வி கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: