சுட்டெரிக்கும் கோடை வெயில் அமராவதி ஆற்றில் அதிகளவு மணல் திட்டுகள்

கரூர்: சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக அமராவதி ஆற்றில் மணல் திட்டுக்கள் அதிகளவு காணப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து உருவாகி கரூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பயணித்து, திருமுக்கூ்டலூர் வழியாக செல்லும் காவிரி ஆற்றுடன் அமராவதி ஆறு கலக்கிறது. திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தின் நீராதாரம் மற்றும் பாசனத்திற்கு ஆதாரமாக அமராவதி ஆறு விளங்கி வருகிறது. ஆண்டுதோறும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை சமயங்களில் பெய்யும் மழையின் போது, அமராவதி ஆற்றில் அதிகளவு தண்ணீர் வரும். அப்போது, செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள தடுப்பணையில் இருந்து பாசனத்திற்கு வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் துவங்கி உச்சத்தில் உள்ளது.

இரண்டு மாதத்துக்கும் மேலாக சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.இதற்கிடையே அமராவதி ஆற்றில் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருந்தது. இவை, கால்நடைகளுக்கு ஆதாரமாக விளங்கி வந்தது. தற்போது அதிக வெயில் காரணமாக தேங்கியிருந்த தண்ணீரும் வற்றிப் போய் மணல் திட்டுக்கள் அதிகளவு காணப்படுகிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான நான்கு மாத காலக்கட்டங்களில் பெய்யும் தென்மேற்கு பருவமழை மற்றும் மே மாதத்தில் பெய்யும் கோடை மழை குறிப்பிட்ட அளவு பெய்தால் அமராவதி ஆற்றில் திரும்பவும் தண்ணீர் வரத் துவங்கும் என்பதால் அந்த நாட்களை மாவட்ட மக்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சுட்டெரிக்கும் கோடை வெயில் அமராவதி ஆற்றில் அதிகளவு மணல் திட்டுகள் appeared first on Dinakaran.

Related Stories: