தீரன் சின்னமலை பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்

சென்னை: தீரன் சின்னமலை பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மரியாதை செலுத்துகிறார். தீரன் சின்னமலை இளம் வயதிலேயே போர்க்கலைகளான வாள்பயிற்சி, வில் பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம், தடிவரிசை போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்து இளம் வீரராக உருவெடுத்தார். ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவை மீட்க மைசூர் மன்னன் திப்பு சுல்தான் உடன் இணைந்து செயல்பட்டார். கொங்கு மண்ணில், அன்றைய மைசூர் அரசு வசூலித்த வரியைத் தடுத்து சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை என்று பெயர் பெற்றார்.

மைசூர் மன்னர் திப்பு சுல்தான் நான்காம் மைசூர் போரில் போர்களத்திலே வீரமரணமடைந்தார். தொடர்ச்சியாக ஆங்கிலேயர்கள் ஆத்திரமடைந்து தீரன் சின்னமலையை சூழ்ச்சி செய்து அவரையும், அவரது சகோதரர்களையும் கைது செய்து சங்ககிரிக் கோட்டையில் 1805ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி தூக்கிலிட்டனர். கலைஞரின் ஆட்சிக் காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் சென்னை, கிண்டியில் முழு உருவ சிலையினை அமைத்து 4.10.1998ம் ஆண்டு கலைஞர் திறந்து வைத்தார்.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சீன்னமலையின் புகழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணியளவில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை கிண்டி, திரு.வி.க தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

The post தீரன் சின்னமலை பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார் appeared first on Dinakaran.

Related Stories: