திருவில்லிபுத்தூரில் ரூ.70 ஆயிரம் திருடிய முதியவர் கைது

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே உள்ள சண்முகசுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலு(64). விவசாயியான இவர், நேற்று முன் தினம் திருவில்லிபுத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் அடகு வைத்திருந்த நகையை திருப்புவதற்காக ரூ.70 ஆயிரம் பணத்தை மஞ்சள் பையில் வைத்து எடுத்து வந்தார். தனியார் நிறுவனத்தில் கேட்டபோது 1ம் தேதிக்குப் பிறகு திருப்பிக் கொள்ளலாம் என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த முதியவர் அந்தப் பகுதியில் உள்ள டீக்கடை சென்றுள்ளார். அப்போது பணத்தை தனது டூவீலரின் முன் பகுதியில் தொங்கவிட்டு சென்றுள்ளார். டீ கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது பணம் வைத்திருந்த பையை காணவில்லை. முதியவரை கண்காணித்து வந்த மர்மநபர் டூவீலரில் தொங்க விட்டிருந்த பணத்தை திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து முதியவர் வேலு திருவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பணத்தை திருடி சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ராஜபாளையத்தை அடுத்துள்ள தளவாய்புரத்தை சேர்ந்த சரவணன் (53) என்பவரை திருவில்லிபுத்தூர் போலீசார் கைது செய்து பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: