சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பாரம்பரியமிக்க பல்வேறு சிறப்பு மிக்க பண்புகளைக் கொண்ட பயிர் ரகங்களை சாகுபடி செய்து வருகின்றனர். அவற்றுள் பல ரகங்கள் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாகவும், பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டதாகவும் உள்ளன. பாரம்பரியம் மிக்க உள்ளூர் ரகங்கள் மரபியல் ஆராய்ச்சியாளர்களுக்கு தேவையான விரும்பத்தக்க புதிய பயிர் ரகங்களை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. தமிழ்நாடு அரசு இதனை கருத்தில் கொண்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தனி நிதிநிலை அறிக்கையில் இதற்கான சிறப்புக் கண்காட்சி நடத்திட அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சிறந்த பண்புகளைக் கொண்ட பல்வேறு பாரம்பரியமிக்க உள்ளூர் பயிர் ரகங்களை கண்டறிந்து பகுதிக்கேற்ற சிறந்த மேம்பாட்டு ரகங்களை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இது குறித்த கண்காட்சிகள் வருடத்திற்கு 3 முறை நடத்த அறவுறுத்தி உள்ளது.