கார்-கண்டெய்னர் லாரி மோதி தீ விபத்து 2 வாகனங்கள் எரிந்து நாசம்

ஸ்ரீபெரும்புதூர், மார்ச் 21: ஸ்ரீபெரும்புதூர், அருகே மேவளூர்குப்பம் பகுதியில் இருந்து உதிரிபாகங்களை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி நேற்று இரவு ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. தண்டலம் கூட்டுச் சாலையில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை லாரி திடீரென கடந்த போது சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வந்த சொகுசு கார் கண்டெய்னர் லாரி பக்கவாட்டில் மோதியது. இதில் கார் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்ட கார், லாரி டிரைவர்கள் வண்டியை விட்டு வெளியேறினர். பின்னர் தீ கொளுந்துவிட்டு மளமளவென எரியத்தொடங்கியது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ வேகமாக பரவியதில் லாரி மற்றும் கார் முழுவதுமாக எரிந்தது. இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இருங்காட்டுகோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் சுமார் இரண்டு மணி நேரம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்து சீரமைக்கு பணியில் ஈடுபட்டனர். மேலும் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: