குன்றத்தூர்: போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல், பரணிபுத்தூர் செல்லும் சாலையில் மளிகை கடை நடத்தி வருபவர் பவுல் (55). இவரது, கடையில் நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டநிலையில், மதுரவாயல், விருகம்பாக்கம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்திருந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்நிலையில், தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் முன்புறமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, இதனை நோட்டமிட்ட மர்ம நபர் நைசாக, மதுரவாயல் தீயணைப்பு வாகனத்தில் ஏறி, அங்கு ஆபத்து காலங்களில் தகவல் பரிமாறிக் கொள்வதற்காக பயன்படுத்தும் வாக்கி - டாக்கியை திருடிச் சென்றனர்.